அண்ணா பல்கலைக்கழகத்தில் 50% தேர்வு கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில், இளநிலை பொறியியல் படிப்புகளில் ரூ.150 ஆக இருந்த தேர்வுக் கட்டணம், ரூ.225 ஆகவும், ரூ.300 ஆக இருந்த செய்முறை சமர்ப்பிப்புக்கான கட்டணம் ரூ.450 ஆகவும், முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு செய்முறைக்கு ரூ.450-ஆக இருந்த தேர்வு கட்டணம், ரூ.650-ஆகவும், இதுபோன்று முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வுக் கட்டுரை (ஒரு தாளுக்கு) சமர்ப்பிப்புக்கு ரூ.600-ஆக இருந்த கட்டணம் ரூ.900-ஆகவும், இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புக்கான டிகிரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கான கட்டணம் ரூ.1,000 லிருந்து ரூ.1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து, கட்டண உயர்வை திரும்பப்பெற மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் 50% தேர்வு கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். இந்த செமஸ்டரில் பழைய கட்டண நடைமுறையே பின்பற்றப்படும். கூடுதலாக தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு திருப்பி தர உத்தரவிட்டுள்ளார்.