அந்தமான் நிகோபர் தீவில் நேற்றும் இன்றும் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
தேசிய நில அதிர்வு மையம் அளித்த தகவலின்படி, நேற்று மட்டும் 13 முறை போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளன. நேற்று காலை 11.05 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான நிலநடுக்கம், இரவு 11.37 மணியளவில் 4.1ஆக 13வது முறையாக பதிவானது.
தொடர்ச்சியாக, இன்று அதிகாலை 12.03 மணியளவில் 4.6 ஆகப் பதிவான நிலநடுக்கம், தொடர்ச்சியாக 12.46, 1.07, 1.30, 1.48, 2.13, 2.34, 2.54, 5.57, 8.05 என அடுத்தடுத்து இதுவரை 10 முறை பதிவாகியுள்ளது.
2 நாள்களில் 23 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் தேசிய நில அதிர்வு மையத்தால் இதுவரை விடுக்கப்படவில்லை.
அதேசமயம் சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சுனாமி அச்சத்தில் உறைந்துள்ளனர்.