அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.
பாஜக உடனான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, அதிமுக மதுரையில் நடத்திய மாநாட்டை சிறுமைபடுத்தியும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கழகத் தொண்டர்களை மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ,கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என்று ஏகமானதாக தீர்மானிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.