சென்னை:
விவசாயிகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மின்சார திருத்த மசோதா 2020-ஐ கண்டித்தும் தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நவம்பர் 5 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் அடியோடு அழித்தொழிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு வேளாண் விரோத சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த மசோதா 2020-ஐ கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் நாடு முழுவதும் நவம்பர் 5 ஆம் தேதி சாலைமறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலச் செயற்குழு, நவம்பர் 5 ஆம் தேதி மாவட்ட தலைநகர்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழுமையாக பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்று வெற்றியடையச் செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.