சேரி என்றாலே இருண்ட பகுதியா?
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை நடத்திய மாணவர்களின் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பங்கேற்றார். அந்தப் புகைப்படங்களுக்காக மாணவ, மாணவிகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். விழாவில் பேசிய அவர், “நான் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவன்தான். அரசுப் பள்ளியில் படிப்பது என்பதையே தாழ்வு மனப்பான்மையாகக் கருதும் சூழல் சமூகத்தில் உள்ளது. நான் படித்த பள்ளியில் ஒருவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே பெரிய வியப்புதான்.
12-ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் நான் பெயில் ஆனேன். இருந்தாலும் படிக்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்தது. ஆனால், அந்த சமயத்தில் படிக்கும் சூழல் எனக்கு இல்லை. நான் படிப்பதைக் காட்டிலும், வரைவதுதான் அதிகம். கணக்குகூட எழுதமாட்டேன். வரைந்துகொண்டேயிருந்தேன். அரசு பள்ளியில் ஆசிரியர்கள் நன்றாக பழகுவார்கள். ஊக்குவிப்பார்கள். அரசு பள்ளிக்கூடங்களில் படித்தது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. நான் என்னவாக ஆகவேண்டும் என்பதையும் அரசு பள்ளி, கல்லூரி நிறுவனங்களே முடிவு செய்தன.
என்னுடைய ‘மெட்ராஸ்’ படத்தின் கதையை பலரிடம் சொல்லும்போது அவர்கள் என்னிடம் அது ‘டார்க்’ ஆக உள்ளது என்றார்கள். சேரிப்பகுதிக் கதைகள் என்றாலே இருண்ட பகுதி, அதன் கதைகள் டார்க் கதைகள் என்ற மனநிலை உண்டு. நானும் சேரியில்தான் வாழ்ந்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்கிறது. கொண்டாட்டம் நிறைந்த வண்ணமயமாக இருந்திருக்கிறது. ஆனால், அந்தப் பகுதி தொடர்பான கதைகளைச் சொல்லப்போகும் போது இது சோகமான கதை என்னும் ஸ்டீரியோ டைப் கருத்து இருக்கிறது.
சென்சார் போர்டு இந்த ‘மெட்ராஸ்’ படம் பார்த்து விட்டு இதற்கு ஏ + தருகிறோம் என்றனர். ஏன் எனக் கேட்டதற்கு, “ஸ்லம் மக்களைப் பற்றி தானே படம் எடுத்துள் ளீர்கள். இது ரவுடிகளுக்கான படம்” என்றனர். அந்த எண்ணங்களை உடைப்பதைப் பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். அதனால் தான் ‘மெட்ராஸ்’ படத்தில் மக்களின் வாழ்வியலை வண்ணமயமாகக் காட்ட விரும்பினேன். அங்கிருக்கும் மனிதர்களையே வைத்து, கூடுதலாக எந்தப் பூச்சும் இல்லாமல், கூடுதல் லைட்டைக்கூடப் பயன்படுத்தா மல் இயல்பாகக் காட்டினேன். ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பிறகு அதனைப் பார்க்கும் கோணம் மாறியது.”
திரையரங்குகளில் திரைப்படமில்லை...
விதிகளை மீறி மலை யாள படங்கள் முன்கூட்டியே ஓடிடி தளங்களில் வெளியிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22-ம் தேதி முதல் மலையாள படங்கள் திரையரங்கு களில் திரையிடப்படாது என கேரள திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தார்கள்.
திரையரங்குகளில் மலையாளப் படம் வெளியாகி 42 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிடப் பட வேண்டும் என்ற ஒப்பந்தம் திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கு மிடையே போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி தயாரிப்பாளர்கள் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
“தயாரிப்பாளர்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வருகின்றனர். ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் முன்னதாகவே வெளியிடப்படுகின்றன.
இதன் காரணமாக நாங்கள் இந்த முடிவை எடுக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பிப்ரவரி 22 (வியாழக்கிழமை) முதல் மலையாளப் படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படாது!” - என திரையரங்க உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த கே. விஜயகுமார் தெரிவித்தார். இதனால், மலையாளத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் செளபின் சாகிரின் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெட்டகம்
வடக்கிலும் புகழ்க்கொடி நாட்டிய வாசன்...
அந்த நாளில் தொடங்கி அண்மைக்காலம் வரையில் தென்னகத்திலிருந்து - குறிப்பாகத் தமிழ்த் திரைத்துறையிலிருந்து வடக்கில் இந்திப் படவுலகில் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டவர்களாகப் பெண் கலைஞர்களையே பட்டியலிட முடிகிறது. வைஜெயந்திமாலா, பத்மினி, ஹேமாமாலினி, ரேகா, ஸ்ரீதேவி என்று அந்தப் பட்டியல் உறுதியானதாக உள்ளது. ஆனால், ஆண் கலைஞர்கள்? சிலர் அங்கே போய் முயன்றிருக்கிறார்கள். ஒன்றிரண்டு முத்திரைகளைப் பதித்ததோடு சரி.
அப்படி நடிகைகளைப்போலவே நீண்டகாலம் இந்திப் படவுலகில் புகழ்பெற்று விளங்கிய ஒரே தமிழ்க் கலைஞர் ரஞ்சன் மட்டுமே. அதுவும் அந்த நாளிலேயே. அதற்குக் காரணம் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்தான். இந்தியத் திரைப்பட ரசிகர்களை வியப்பிலாழ்த்தி மலைக்க வைத்த அந்தநாள் பிரம்மாண்டமான சந்திரலேகா படத்தில் நடித்த ரஞ்சனுக்கு வடக்கிலும் ரசிகர்கள் குவிந்தார்கள். மற்ற இந்திப்பட நாயகர்களிடம் இல்லாத வாள் சண்டைத் திறன் ரஞ்சனிடம் இருந்ததே பிரதானமான காரணம் என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.
அவரது வாள் வீச்சு அத்தனை நேர்த்தியாக இருந்ததாக வடநாட்டு ரசிகர்களுக்கும் தோன்றியிருக்கிறது. அது புதுமையான சண்டைக்கலையாகவும் பார்க்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்தியில் உச்சத்திலிருந்த நடிகர்கள் திலீப்குமார், ராஜ்கபூர், அசோக்குமார் போன்றவர்கள். அவர்களெல்லோரும் மிகச்சிறந்த நடிகர்கள்தாம். ஆனால், அப்போது உருவாக்கப்பட்ட ராஜா - ராணி கதைகளைக்கொண்ட இந்திப் படங்களுக்கு ரஞ்சனே பொருத்தமானவராகக் கருதப்பட்டார்.
ரஞ்சனுக்கு நடனம் தெரியும், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத்தெரியும், விமானம்கூட ஓட்டத்தெரியுமாம். இப்படியும் ஒரு கலைஞரா என்று வடநாட்டில் வியந்ததில் வியப்பில்லைதானே? துவக்கத்தில் ரஞ்சன் தமிழில் அசோக்குமார், சாலிவாகனன் போன்ற படங்களில் நடித்தபோதே அவரது தனித்துவத்தை உணர்ந்து தனது ஜெமினி நிறுவனத்தில் அவரை வாசன் இணைத்துக்கொண்டார். முதலில் சந்திரலேகாவிலும் பின்னர் இந்தியில் உருவான அபூர்வ சகோதரர்கள் படத்திலும் ரஞ்சனை நடிக்க வைத்து அவருக்கு வடநாட்டிலும் ரசிகர்களை ஏற்படுத்தித்தந்தார் வாசன்.
இந்தியில் பத்து வருடங்கள் கோலோச்சிய ஒரே தமிழ்க் கலைஞர் இன்றுவரையில் ரஞ்சன் மட்டுமே என்கிற பெருமை அவரை நாடிவந்து சேர்ந்தது. தமிழில் அபூர்வ சகோதரர் படத்தை எடுத்தபோது அதில் எம்.கே. ராதாவை நடிக்க வைத்தார் வாசன். அப்போதே அது ஆங்கிலப்படங்களுக்கு நிகராக தமிழில் வந்த படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்தப் படத்தைப் பார்த்து வியந்த எம்.ஜி.ஆர். இப்படிப்பட்ட ஒரு படம் தனக்கு எப்போது அமையுமோ என்று ஏங்கியிருக்கிறார்.
அந்த ஏக்கம்தான் பின்னாளில் அவரை நீரும் நெருப்பும் என்ற ஒரு படத்தை உருவாக்க வைத்திருக்கிறது. இப்படித்தான் வாசன் படங்களில் நடிக்க கலைஞர்கள் பலருக்கும் ஏக்கமும் விருப்பமுமாக இருந்திருக்கிறது. அபூர்வ சகோதரர்களில் நடிக்க பிரபல நடிகையான பானுமதியை அணுகியபோது அவர் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார் வாசனிடம். ஜெமினி தயாரித்த மங்கம்மா சபதம் என்னை மிகவும் கவர்ந்த படம். அதில் நான் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு.
அதை இந்தியில் தயாரிக்கும்போது அதில் நடிக்க எனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று உறுதி சொன்னால் நான் இந்த அபூர்வ சகோதரர்களில் நடிக்கிறேன் என்றாராம் பி. பானுமதி. இதேபோல, தான் தயாரித்த ஒளவையார் படத்தைப் பார்க்க அந்நாளில் ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த எழுத்தாளர் கல்கியை அழைத்துச் சென்றிருக்கிறார் வாசன். படத்தின் பிரம்மாண்டக் காட்சிகளைக் கண்டு வியந்த கல்கிக்கும் ஒரு ஏக்கம் பிறந்திருக்கிறது அப்போதே. வாசனிடம் இப்படிச் சொன்னாராம்: என்னுடைய பார்த்திபன் கனவு போன்ற நாவல்களை உங்களால்தான் திரைப்படமாக்க இயலும். அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றாராம். அதுமட்டுமா? வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை விகடனில் தொடராக வாசன் வெளியிட்டு வந்தார்.
அந்தத் தொடர் நிறைவடைந்ததும் அதனைத் திரைப்படமாக எடுக்கவும் அவரிடம் திட்டமிருந்தது. கட்டபொம்மன் கதையை அப்போது நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நாடகமாக நடித்துவந்தார். பத்மினி பிக்சர்ஸ் சார்பில் அதனைப் படமாக எடுக்கவும் நினைத்தார் சிவாஜி. அதனால் அவர் வாசனிடம் வந்து, கட்டபொம்மன் கதையைத் திரைப்படமாக எடுக்க தனக்கு விட்டுக்கொடுக்கும்படி வாசனிடம் வேண்டினார்.
அப்போது வாசன், எப்படி ஒளவையார் படம் கே.பி.சுந்தராம்பாள் இல்லாமல் சோபித்திருக்காதோ அப்படித்தான் நீங்கள் இல்லாத கட்டபொம்மனையும் நினைத்துப்பார்க்க இயலாது. அதனை நீங்களே திரைப்படமாகவும் எடுக்க விரும்பியுள்ளபோது, அந்தக் கட்டபொம்மனே என்னிடம் வந்து கேட்பதுபோல உணர்கிறேன். என் முயற்சியை இப்போதே நான் விட்டுவிடுகிறேன் என்றாராம் எஸ்.எஸ். வாசன்.