இன்று அமித்ஷாவை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள் குழு!
சென்னை, ஜன. 12 - மிக்ஜம் புயல் மற்றும் குமரிக் கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை - வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணம் கோரி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு, சனிக்கிழமையன்று தில்லியில் நேரில் சந்தித்து முறையிடுகிறது.
டி.ஆர். பாலு (திமுக), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), சுப்பராயன் (சிபிஐ), பி.ஆர். நடராஜன் (சிபிஎம்), ரவிக்குமார் (விசிக), நவாஸ் கனி (முஸ்லிம் லீக்), சின்ராஜ் (கொங்குநாடு மக்கள் கட்சி) ஆகிய 8 பேர் கொண்ட எம்.பி.க்கள் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் சனிக்கிழமை (ஜன.13) பிற்பகல் 3.30 மணிக்குச் சந்திக்கின்றனர். அப்போது, மழை - வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசு கோரியிருக்கும் ரூ. 37 ஆயிரத்து 907 கோடியை விரைந்து வழங்குமாறு அமித்ஷாவிடம் வலியுறுத்துகின்றனர்.
தலைமறைவான துணைவேந்தரின்
கூட்டாளிகளை பணிநீக்கம் செய்க!
பெரியார் பல்கலை ஆசிரியர்கள் கோரிக்கை
சேலம், ஜன. 12 - துணை வேந்தர் ஜெகநாதனின் முறைகேடுகளுக்குத் துணைபோன பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் கணினி அறிவியல்துறை தலைவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என பெரியார் பல்கலைக் கழக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி கடந்த டிசம்பர் 26 அன்று கைது செய்யப்பட்டார். தற்போது, பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு உடந்தையாக இருந்து தற்போது தலைமறைவாக உள்ள பல்கலைக் கழக பதிவாளர் பொறுப்பு தங்கவேல் மற்றும் கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஷ் ஆகியோர் 02.01.2024 முதல் இன்றுவரை எவ்வித அறிவிப்பும் இல்லாமலும் எவ்வித விடுப்பும் அளிக்காமல் விடுமுறையில் இருக்கின்றனர். இது பணியாளர் நடத்தை விதிகளுக்கு முரணானது. மேலும், தலைமறைவாக இருக்கும் இவர்களை அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பொன்முடி ஆஜராவதிலிருந்து விலக்கு
புதுதில்லி, ஜன. 12 - சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோ ருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 21 அன்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இரு வரும் சிறையில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்சநீதிமன்ற நீதிபதி சதீஷ் சந்திர சர்மா உத்தரவிட்டுள்ளார்.
அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை மனு தள்ளுபடி
திண்டுக்கல், ஜன.12- திண்டுக்கல்லில் பிரபல அரசு மருத்துவரி டம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரியை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மதுரை அம லாக்கத்துறை அதிகாரிகள் அங்கித்திவாரியிடம் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு செய்திருந்தனர். ஆனால் அனுமதி வழங்கக்கூடாது என்றும், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பு அரசு வழக்கறிஞர் அனுராதா நீதிபதியை கேட்டுக்கொண்டார். இதனையடுத்து நீதிபதி மோகனா, அமலாக்கத்துறை அதிகாரி களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட் டார். அமலாக்கத்துறையினரின் மனு மூன்றா வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையர் நியமன சட்டம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
புதுதில்லி, ஜன. 12 - தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அதற்கு மாறாக தேர்வுக்குழு விலிருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யை நீக்கிவிட்டு, ஒன்றிய பாஜக அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரசைச் சேர்ந்த ஜெயா தாக்குர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டாலும், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.