tamilnadu

img

11 கோடிப் பேரை 100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து வெளியேற்றும் மோடி அரசுக்கு கண்டனம்

சென்னை, ஜன.30-  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆதார் எண்  இணைத்து செயல்படுத்தும் அறி விப்பின் மூலமாக நாடு முழுவதும் 11  கோடி பேரைத் திட்டத்திலிருந்து வெளி யேற்ற திட்டமிட்டுள்ள பாஜக அரசைக் கண்டித்தும், இதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30 (புதனன்று) தமிழ்நாடு முழுவதும், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு நகல் எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டம், நாடு முழுவதும் வேளாண் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வேலையின்மைக்கு மாற்றாக நூறு நாட்களுக்கு வேலை அளித்திட ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்தில் -  இடதுசாரி கட்சிகளின் நிர்ப்பந்தத் தால் நிறைவேற்றப்பட்டு கடந்த 20  ஆண்டுகளாக நாட்டில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கும் இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தை பாஜக ஆட்சி அமைந்தது முதல் பிரதமர் நரேந்திர மோடியும்,

அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திட்டத்தை படிப்படியாக ஒழித்துக்கட்டிட முற்பட்டு வருவது, திட்டத்தின் செயலாக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் உணர்த்துகின்றன. நாடாளுமன்ற திருத்தங்கள் மூல மாக நிறைவேற்றிட வேண்டிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மோடி அரசு தானடித்த மூப்பாக விதிகளை மாற்றி ஒருபக்கம் சிதைக்கிறது. சட்டத்திற்கு புறம்பாக மாற்றியமைக்கப்பட்ட விதிகளால், இயந்திரங்களின் பயன் பாடும், ஒப்பந்ததாரர்களும், கட்டு மானப் பணிகளுக்கு நிதியை மடை மாற்றுவதும் என திட்டத்தின் அடிப் படை கட்டமைப்பையே சிதைத்து சின்னாபின்னப்படுத்தியுள்ளனர். இத னால் கிராமப்புற ஏழைகளுக்கு 100 நாள்களுக்கு வேலை கிடைப்பதற்கு மாறாக 10 முதல் 40 நாட்கள் வரையே வேலை கிடைக்கிறது.

ஊதியம் வழங்காத ஒன்றிய அரசு
நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் குறைத்து வருகிறது. கொரோ னா பெருந்தொற்று காலத்தில் ரூ.1  லட்சத்து 6 ஆயிரம் கோடி ஒதுக்கப் பட்டிருந்த நிலையில் அடுத்த 2022-23  ஆம் ஆண்டில் ரூ.89 ஆயிரம் கோடி யாக நிதி குறைக்கப்பட்டது. 2023-24 ஆம் ஆண்டிற்கு இது ரூ.69 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டது. அரைகுறையாக ஒதுக்கீடு செய்யப் படும் நிதியையும் வேலை செய்த தொழி லாளர்களுக்கு உரிய காலத்தில் ஊதி யம் வழங்காமல் 3 மாதம், 4 மாதம் கழித்து வழங்குவது என ஏழைகளை அல்லாட வைக்கிறது ஒன்றிய பாஜகஅரசு.

தற்பொழுது திட்டத்தின் தொழி லாளர்களின் தலையில் பேரிடியாக ஒன்றிய அரசு ஆதார் இணைப்புடன் கூடிய ஊதிய பரிவர்த்தனை என  அறிவிப்பாணையை வெளியிட்டு, ஓராண்டு காலமாக வேலை அட்டைப் பெற்றவர்களின் ஆதார் இணைப்பை செயல்படுத்தியது. ஆதார் இணைப்பை முழுமையாக நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் கடந்த 31.02.2023 அன்றுடன் அதற்கான இணை யத்தை ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் நிறுத்திவிட்டது. இதனால் நாடு முழுவதும் வேலை அட்டைப் பெற்றுள்ள 25 கோடி பயனாளிகளில் 11 கோடி பேர் விடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

திட்டத்தை ஒழித்திட பல முயற்சி களை மேற்கொண்டுள்ள அரசின் மற்று மொரு முயற்சியாக இது உள்ளது. ஆதார் இணைப்பை முழுமையாக செயல்படுத்திட ஒன்றிய அரசு கால அவகாசம் வழங்கி அனைத்து வித மான உதவிகளையும் செய்து, முழுமைப் படுத்துவதற்கு மாறாக பாதியில் நிறுத்திவிட்டு, மக்களை பந்தாடும் நிலையை உருவாக்கியுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் போராட்டங்களை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 25 லட்சம் பேர் விடுபடும் நிலை 
தமிழ்நாட்டில் ஆதார் இணைப்பு அறிவிப்பால் வேலை அட்டைப் பெற்றுள்ள 92 லட்சம் பேரில் இது வரை 67 லட்சம் பேர் மட்டுமே ஆதாரை இணைத்துள்ளனர். ஏறக்குறைய 25 லட்சம் பேர் ஆதார் இணைக்காமல் விடுபடும் நிலை உருவாகியுள்ளது. ஆதார் இணைப்பை உடனே திரும்பப் பெற வேண்டும். திட்டத்தில் வேலை அட்டைப் பெற்றுள்ள அனைவரும் வேலை - ஊதியம் வழங்கிட வேண்டும். திட்டத்திற்கு வரும் 2024 -25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒன்றிய அரசு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திட வேண்டும். நிறுத்தப் பட்டுள்ள வேலையை உடனே துவங்கிட வேண்டும். ஊதிய பாக்கியை உடனே விடுவித்திட வேண்டும் என்று வலி யுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  ஜனவரி 30 அன்று 42 மையங்களில் நகல் எரிக்கும் போராட்டம் நடை பெற்றது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். 

சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர்  நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரிலும், மாநிலத்தலை வர் எம்.சின்னத்துரை எம்.எல்.ஏ.,  திருவாரூரிலும், மாநிலப் பொதுச்செய லாளர் வீ.அமிர்தலிங்கம் தர்மபுரி மாவட்டம் அரூரிலும், மாநில பொருளா ளர் அ.பழநிச்சாமி திருச்சியிலும் கலந்து கொண்டனர். நடைபெற்ற போரா ட்டங்களில் ஆதார் இணைப்பிற்கான அரசின் நகல் ஆணையை எரித்து, எதிர்ப்பு தெரிவித்து ஆவேச முழக்க மிட்டனர்.