கொரோனா தாக்குதலில் 2வது அலை நிச்சயம் ஏற்படும் என்ற உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் ஊகான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 9.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மட்டும் இதுவரை 82,066 பேர் உயிரிழந்துள்ளனர். 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இதுவரையிலான கொரோனா தாக்குதல் ஆரம்ப கட்டம்தான். இனி தாக்குதல் தீவிரமாகும். உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பரவுவது நிச்சயம் அதை தடுக்க இயலாது என உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
, உலக சுகாதார அமைப்பின் பொது நிர்வாக இயக்குனருமான டேவிட் நபாரோ, லண்டனில் நடந்த வெளியுறவுத் துறை செயலர்களின் கூட்டத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா பரவல் குறித்து தற்போது கவலையே இல்லாமல் பல நாடுகள் செயல்படுகின்றன. இது மிகப்பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும். வரக்கூடிய அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய சமயம் இது. இதுவரையிலான கொரோனாவின் தாக்குதல் என்பது வெறும் துவக்க நிலைதான். இன்னும் நடுக்கட்டத்தை அடையவில்லை. இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்வதில் உலக நாடுகளிடம் தற்போது அலட்சியப் போக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனாவின் 2வது அலை நிச்சயம். அதை தடுக்க முடியாது. அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும்.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும். ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் இதுவரை கொரோனா உள்ளது. இந்நிலையில் 2வது அலை வந்த பின்னர், உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மேலும் மோசமான நிலையை எட்டும். குறிப்பாக உலகம் முழுவதும் ஏழைகள், தங்கள் வாழ்வாதாரத்தை அடியோடு இழந்து, இருமடங்கு பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.