tamilnadu

img

இந்நாள் செப்டம்பர் 18 இதற்கு முன்னால்

1838 - சோளச் சட்ட எதிர்ப்பி யக்கம் இங்கிலாந்தின் மான்செஸ்ட்டரில் தொடங்கப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் உணவு தானியங்களுக்கு அதிக வரி விதித்த சட்டங்கள் சோளச் சட்டங்கள் என்றழைக்கப்பட்டன. நெப்போலியப் போர்களின்போது, வெளிநாடுகளிலிருந்து உணவு தானியங்கள் இறக்குமதி செய்வதில் நிலவிய சிக்கல்கள் காரணமாக, உள்நாட்டில் அதிக உணவு தானிய உற்பத்தியை அரசு ஊக்குவித்தது. இறக்குமதி இல்லாததால் தானியங்கள் விலை உயர்ந்து, ஏராளமான லாபமீட்டிய நிலவுடைமையாளர்கள், போர்கள் முடிந்து, தானியங்கள் இறக்குமதி தொடங்கியதால் ஏற்பட்ட விலைக்குறைவை ஏற்கத் தயாராக இல்லை. பெரும் நிலவுடைமையாளர்களே அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தியதால், இறக்குமதி தானியங்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு, விலை செயற்கையாக உயர்த்தப்பட்டது.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் நடுத்தர வர்க்கம் என்பது அப்போதுதான் உருவாகியிருந்தது. ஒருபுறம் தொழிற்சாலைகள் கூலியைக் குறைக்க, மறுபுறம் அரசின் வரிகள் செயற்கையாக ரொட்டியின் விலையை உயர்த்தின. கடுமையான வேலையின்மையும் நிலவியதால், 1819இல் மான்செஸ்ட்டரின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் சுமார் 80 ஆயிரம் மக்கள் திரண்டு போராட, குதிரைப்படை புகுந்து தாக்கியதில் 18 பேர் பலியாயினர். வாட்டர்லூ போரை நினைவுகூரும்விதமாக, இது பீட்டர்லூ படுகொலை என்றழைக்கப்படுகிறது. ஆனாலும் அரசு வரிகளை நீக்காதது பிரச்சனைகளைத் தீவிரப்படுத்திய நிலையில்தான், சோளச்சட்ட எதிர்ப்பியக்கம் உருவானது. நடுத்தர வர்க்கத்தினரின் இயக்கமாகத் தொடங்கிய இது, ஏற்கெனவே அடிமைமுறை எதிர்ப்பியக்கம் கையாண்ட போராட்ட வழிமுறைகளுடன், பல்வேறு புதிய முறைகளையும் கையாண்டது.

அக்காலத்தில், வரிகள், செலவுகள்போக 40 ஷில்லிங் வருவாய் ஈட்டக்கூடிய சொந்த நிலம் வைத்திருப்பவர்களுக்கு வாக்குரிமை இருந்ததால், ஆதரவாளர்களுக்கு அதற்கேற்ற அளவு நிலம் வழங்கி, வாக்குரிமை பெற்று, தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வைத்தது உள்ளிட்ட பல்வேறு புதிய போராட்ட முறைகளைக் கையாண்டாலும், 1845இல் உருளைக்கிழங்கு விளைச்சல் பாதிப்பால் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சமே, 1846இல் அச்சட்டங்களை நீக்கச்செய்தது. ஆனாலும், இந்தப் போராட்டத்தின் வெற்றியே, 20ஆம் நூற்றாண்டில் தடையற்ற வணிகம் இங்கிலாந்தின் கொள்கையாக மாறக் காரணமாக இருந்ததாக சில வல்லுனர்களால் குறிப்பிடப்படுகிறது. நிதி திரட்டல், போராட்டங்கள் உள்ளிட்ட செயல்பாட்டு முறைகளால், பின்னாளில் ஏற்பட்ட (எந்த நோக்கத்திற்கும்) ஆதரவு திரட்டும் (லாபியிங்) இயக்கங்களுக்கு இந்த இயக்கம் முன்மாதிரியாக அமைந்தது.

- அறிவுக்கடல்