செக் குடியரசில் மூளைச்சாவு அடைந்து பெண்ணிற்கு 117 நாட்களுக்கு பின் குழந்தை பிறந்துள்ளது.
செக் குடியரசு நாட்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பர்னோ பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.4 மாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவர்கள் அவரது கருவில் வளரும் குழந்தையை பாதுகாக்க திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. உணர்வற்ற தாயின் உடல்நிலையையும், அவரது கருப்பையில் உருவாகி வந்த உயிரின் வளர்ச்சியையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். கருவின் வளர்ச்சி முறையாக நடைபெற கருவிகளின் உதவியுடன் மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டது.
117 நாட்களுக்கு பின் கடந்த ஆகஸ்ட் 15 அன்று மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். பிறந்த குழந்தைக்கு எலிஸ்கா என்று பெயரிடப்பட்டது. எலிஸ்கா பிறந்த அடுத்த சில மணி நேரங்களில் உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாக கருவைச் சுமந்த பெண் உயிரிழந்தார். உலக அளவில் 117 நாட்கள் மூளைச்சாவு அடைந்த ஒரு தாயின் வயிற்றில் வளர்ந்து குழந்தை பிறந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.