கீழடியில் 2500 ஆண்டுகள் பழமையான சுடாத மண்குவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடியில் உலகின் தொன்மையான நாகரீகத்தின் ஆய்வு செய்யும் பொருட்டு பல கட்டங்களாக அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றது. உலகின் முதல் மற்றும் தொன்மையான நாகரீகம் தமிழருடையதே என்பதை உலகிற்கு பறைசாற்றும் விதமாக பல அடையாளங்களும், பொருட்களும் இங்கு கிடைக்கப்பெற்று ஆச்சரியமளித்து வருகிறது. இந்நிலையில் தமிழக தொல்லியல் துறையோ கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 47 லட்ச ரூபாய் செலவில் எட்டரை ஏக்கர் பரப்பளவில் 39 குழிகள் ( 10.2 மீட்டர் நீள அகலம் உள்ளது) தோண்டப்பட்டு தனது ஐந்தாவது கட்ட அகழாய்வை துவக்கியது. இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதில் மணிகள் ,அணிகலன்கள் பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள் இரும்பு பொருள்கள் செப்புக்காசுகள் , உணவு குவளை தண்ணீர் ஜக் உள்ளிட்ட சுமார் 750 பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிக அளவில் சுவர்கள் கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று நடந்த பணிகளின் போது சுடாத மண்குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மண்பாண்ட பொருட்கள் சுடப்பட்டால் மட்டுமே புவியில் நீண்ட நாட்கள் மட்காமல் இருக்கும். சுடாத மண்பாண்டப்பொருட்கள் சில நூற்றாண்டுகளில் மக்கிவிடும் . ஆனால் கீழடியில் கிடைக்கப்பட்ட சுடாத மண்குவளை இன்று வரை மட்காமல் உள்ளது. அது பளபளப்பாகவும் உள்ளது. இந்த குவளை சுமார் 2500 ஆண்டுகளாக மக்கி போகாமல் இருப்பது குறித்து ஆய்வாளர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.