சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ரவியை எதிர்த்து கடலூரிலும், சிதம்பரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், மார்க்சியம் அந்நிய தத்துவம் என்றும், மார்க்சிய சிந்தனை இந்தியாவை சிதைத்து விட்டது என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, ஆர்.என். ரவி அரசு அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அடாவடித் தனமாகவும், பொருத்தமற்ற முறையிலும் பேசுவதை கண்டித்தும், மார்க்சியம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் அவர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்ய வந்த ஆளுநர் ரவியை எதிர்த்து கடலூரிலும், சிதம்பரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.