மதுரை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் சாலையோரவியாபாரிகள் போட்ட முதலீடு கைசேருமாஎன தெரியாமல் நின்று கொண்டிருக்கின்றனர்.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, தமிழகம் முழுவதும் உள்ளநிலைமையைப் பறைசாற்றுகிறது இச்செய்தி.
மதுரையின் மையப்பகுதியான தெற்கு மாசி வீதி ஜவுளிக் கடைகள் அதிகம் நிறைந்தபகுதி. ஜவுளிக் கடைகளை ஒட்டி ஆயிரக் கணக்கான சாலையோர வியாபாரிகள் தீபாவளியையொட்டி கடை விரித்துள்ளனர். விளக்குத்தூண், பத்துதூண் சந்து, நவாப் கானா தெரு, கீழமாசி வீதி பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கடைவைத்து நின்றுகொண்டிருக்கின்றனர். கடந்த எட்டு மாதங்களாக கொரோனா பொது முடக்கம், ஸ்மார்ட் சிட்டி பணிகளால் கடைகள்போட முடியாமல் இருந்த நிலையில் கடந்த40 நாட்களாகத் தான் கடை நடத்தி வரு கின்றனர்.
தீபாவளி வியாபாரம் குறித்து நவாப் கானா தெருவில் கடை வைத்துள்ள மாலிக்என்ற வியாபாரி கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளாக இந்த இடத்தில் கடை நடத்தி வருகிறேன். கொரோனா ஊரடங்கால் வியாபாரம் இல்லாதிருந்தது. தீபாவளி என்றால் 15 தினங்களுக்கு முன்பே வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து விடும். தினசரி இருபதாயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும், தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. ஆனால் 50 சதவீதம் கூட வியாபாரம் நடைபெறவில்லை. ஒரு லட்சம்ரூபாய் கடன் பெற்று பொருட்களை வாங்கியுள்ளேன். நஷ்டம் ஏற்படாமல் வாங்கிய கடனை கட்டுவதற்கு வியாபாரம் நடைபெற வேண்டும்” என்றார்.
அதே பகுதியில் வளையல் கடை வைத்திருக்கும் பாபு என்பவர் கூறுகையில், “நான் பத்தாண்டுகளாக கடை வைத்துள்ளேன். மதுரையில் உள்ள சில மொத்த வியாபாரிகள் மும்பை, ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் இருந்து மொத்தமாக வளையல் போன்ற ஆபரண பொருட்களை கொள்முதல் செய்து எங்களிடம் விற்பனைக்கு கொடுக்கிறார்கள். காலையில் விற்பனைக்கு கொடுப்பார்கள். மாலையில் எங்களுடைய லாபம் போக மீதித் தொகையை அவர்களிடம் கட்டி விடுவோம். தினசரி ரூபாய் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும். கடந்த எட்டு மாதங்களாக கொரோனா, ஸ்மார்ட் சிட்டி பணிகளால் கடை நடத்த முடியவில்லை. 15 தினங்களாகத் தான் வியாபாரம் நடைபெறுகிறது. முன்பெல்லாம் தீபாவளியென்றால் தினசரி பத்தாயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும். இந்த தீபாவளிக்கு தினசரி நான்காயிரம் ரூபாய் வரை தான் வியாபாரம் நடைபெறுகிறது. முன்பெல்லாம் கடை முன்பு மக்கள்கூட்டமாக நின்று வளையல்களை தேடி எடுப்பார்கள். தற்போது அந்த நிலை மாறியுள்ளது. காவல்துறையினர் மக்கள் அதிகமாகக் கூடினால் சத்தம் போடுகிறார்கள்” என்றார்.
சிவா மார்க்கெட்டிங் உரிமையாளர் கே. சிவா கூறுகையில் ,கடந்த ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. அப்போது கடையை திறந்து வைத்தோம். நான்கு மணி வரை தான் வியாபாரம் என்ற நிலையில் மக்கள் அதிகம் வருவதில்லை. ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை பெய்தால் மழை நீரும் கழிவு நீரும் சேர்ந்து கடை வாசல்வரை வந்து விடுகிறது. இதனால் சில நேரங்களில் கடையை மூட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மீனாட்சியம்மன் கோவில் திறக்கப் பட்டாலும் வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வராததால் வியாபாரம் மிகவும்மோசமான நிலையில் உள்ளது என்றார். மேலும், கடந்த பத்து நாட்களாகத்தான் தீபாவளி வியாபாரம் நடைபெறுகிறது. 500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கக் கூடியவர்கள் ரூ.200 முதல் ரூ.300க்குள் தான் பொருட்களை வாங்குகிறார்கள். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையில் மக்களிடம் பணப்புழக்கம் என்பது குறைந்துள்ளது. உற்பத்திப் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்காததால் சிறு உற்பத்தியாளர்கள், சிறு வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்தத் தீபாவளியால் யாருக்கும் லாபம் ஒன்றும் பெரிதாக கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
நேதாஜி ரோடு பகுதியில் கடை வைத்துள்ளசாலையோர வியாபாரி மோகன் கூறுகையில், 35 ஆண்டுகளாக பனியன், ஜட்டி, துண்டுவியாபாரம் செய்து வருகிறேன். தினசரி ரூ.1,500-க்கு வியாபாரம் நடைபெறும். இதில் 20 சதவீதம் லாபம் இருக்கும் .இதை வைத்து குடும்பத்தை நடத்துவோம். கொரோனா தொற்று பரவல் காரணமாக பலர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ள நிலையில்அவர்களும் சாலையோர வியாபாரத்திற்கு வந்துவிட்டார்கள். இதனால் என்னுடைய வழக்கமான வியாபாரம் குறைந்து விட்டது என்றார்.பெல்ட் வியாபாரி செல்வம் கூறுகையில், “சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இதனால் ஒரு சிலர் மட்டுமே பயனடைந்துள் ளார்கள். பெரும்பாலான வங்கிகள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி மத்திய அரசு அறிவித்த கடன் தொகையை தர மறுத்து வருகின்றன. இது போன்ற பண்டிகைக் காலங்களில் மத்திய அரசு அறிவித்த கடன் உதவி கிடைத்தால் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். வங்கிகள் உடனடியாக கடனுதவி அளிக்கவேண்டும்” என்றார்.தீபாவளிக்காக மதுரை நகர வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால்,அவர்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது என்பதே வியாபாரிகளின் புலம்பலாக உள்ளது.
===ஜெ. பொன்மாறன்===