பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்னா யானை, இன்று காலை 7 மணி அளவில் கோவை மாநகருக்குள் புகுந்தது.
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்ட மக்னா யானை, கடந்த சில தினங்களாக வனப்பகுதியிலேயே சுற்றித்திரிந்தது. அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். செவ்வாயன்று காலை 5 மணிக்கு திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை, சேத்துமடை வழியாக நல்லூத்துக்குழி, காக்காபுதூர் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்தது. யானையை வனத்துறையினர் தீவிரமான கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை 7 மணி அளவில் காட்டு யானை கோவை மாநகருக்குள் புகுந்தது.
கோவையில் உள்ள மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்த யானை, அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. குரும்பபாளையம் பகுதிக்கு எதிரே வந்த ஒருவரை யானை தும்பிக்கையில் தள்ளிவிட்டு சென்றது. இதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். யானையை பிடிக்க வனத்துறையினர் பயன்படுத்திய வாகனத்தின் மீது யானை மோதியதில் வாகனம் சேதம் அடைந்துள்ளது. காட்டு யானை சுற்றித்திரிவதால் அச்சமடைந்த பொதுமக்கள், யானையை விரட்டியடிக்க வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.