கோவை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர் மற்றும் ஆசிரியர்களை தமிழக அரசுக்கு எதிராக திசைதிருப்பும் வேலையில் ஈடுபடும் துணைவேந்தர் சூரப்பாவைக் கண்டித்துபுதனன்று கோவையில் ஊழியர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் நலனைப் புறக்கணித்து, மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் ‘’உயர் சிறப்பு அந்தஸ்து‘’ என்ற பெயரில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைக் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா ஈடுபட்டுள்ளார். இதற்கு தமிழக அரசு உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக புதிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு,சிறப்பு தற்செயல் விடுப்பு உள்ளிட்ட விடுமுறைகளை எடுக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக 2007 இல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, அண்ணா பல்கலைக்கழகத்தை 5 ஆக பிரித்தார். பின்னர் 2012 இல் முதல்வர் ஜெயலலிதா அதனை மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைத்ததோடு, சட்டமன்றத்திலும் இந்த இணைப்பின் மூலம் ஊழியர்களுக்கோ மாணவர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளித்தார். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக அந்த இணைப்புப் பணி இதுவரை முழுமை பெறவில்லை. இதன் காரணமாக ஒரு பகுதி ஆசிரியர் மற்றும் ஊழியர்களை மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழான ஊழியர்களாக உள்ளீர்ப்பு செய்யப்பட்டிருக்கின்றனர். இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை உள்ளீர்ப்பு செய்யும் பணி முடியவில்லை.
இதற்கு முக்கியக் காரணம், பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா கீழ் இயங்கும் பல்கலைக் கழக நிர்வாக செயல்பாடின்மையே என விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. இந்த செயல்பாடின்மைக்கு எதிராக பல ஊழியர்கள் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளனர். இவ்வழக்குகள் தற்போதுவரை நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், உள்ளீர்ப்பு செய்யாத ஆசிரியர் மற்றும் ஊழியர்களை நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, தமிழக அரசிற்கு எதிராகத் திருப்பிவிடும் வகையில் விடுப்பு உள்ளிட்ட உரிமை களைப் பறிக்கும் விதத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
இதனைக் கண்டித்தும், சுற்றறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தியும் புதனன்று கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வளாகத்தின் முன்பு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பல்கலைக்கழக முதல்வர் ரவிச்சந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்ற ஆவன செய்யப்படும் என உறுதியளித்தார். இதன்பின்னரே ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் குடும்பத்தினருடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.