பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழைக்கு ராட்சத மரம் விழுந்து 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்த ராட்சத மரம் இருசக்கர வாகனங்கள் மீது விழுந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பெரும் சேதமடைந்தன.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இதுகுறித்து நேரில் சென்று பார்வையிட்ட பொள்ளாச்சி
நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்
கூறுகையில் ;-
பொள்ளாச்சி முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மரம் விழுந்துள்ளது. மேலும் பொள்ளாச்சி நகர பகுதிகளில் காய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மரம் விழுந்ததில் சேதமடைந்த இருசக்கர வாகன உரிமையாளர்கள் கூறுகையில் ;-
பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்திற்கு பின்பு உள்ள நகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்துமிடம் தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
நாங்கள் எங்களது இருசக்கர வாகனத்தை ஸ்டேண்ட் நிர்வாகத்தை நம்பித்தான் நிறுத்தி செல்கிறோம். ஆனால் தற்போது மழை காரணமாக மரம் விழுந்ததில் எங்களது வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளது. குத்தகை நிர்வாகத்தினர் இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு மேற்கூரை அமைத்து தான் பாதுகாப்பான முறையில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் வெட்டவெளியில்தான் பல ஆண்டுகளாக நிறுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு நாள் பாதுகாப்பு கட்டணமாக ரூ.8 வசூலிக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் ரசீது கொடுக்க வேண்டுமென நிபந்தனை விதித்தது. ஆனால் மாறாக இருசக்கர நிறுத்தம் குத்தகை உரிமையாளர்கள் ரூ.10 வரை வசூலிக்கின்றனர். இதுகுறித்து கேள்வி கேட்டால் மதுபானக்கடையில் போய் கேள்வி கேளுங்கள்.தனியார் பேருந்துகளில் கேளுங்கள். என திமிராக பதிலளிக்கின்றனர்.
தற்போது எங்களது 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பெரும் சேதமடைந்துள்ளது. இதற்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே உங்களது வாகனத்தை நீங்களே சரி செய்துகொள்ளுங்கள் என, கையை விரிக்கின்றனர். இதனை எங்களால் ஏற்க முடியாது. இருசக்கர வாகன நிறுத்தம் நிர்வாகமே எங்களது வாகனங்களை சரிசெய்து தர வேண்டும் என இவ்வாறு தெரிவித்தனர்.