கோவையில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியது குறித்து விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற "ரோட் ஷோ" நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் விதி இருக்கும் நிலையில் பள்ளி சீருடையுடன் மாணவர்கள் பிரதமர் நிகழ்வில் பங்கேற்க அழைத்து வரப்பட்டதும், பள்ளி மாணவர்கள் பா.ஜ.க தொப்பியுடனும், கட்சிக்கொடியுடன் குழந்தைகளை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தியதும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியது குறித்து கல்வித்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கோவை சாய்பாபா காலனியில் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியிலிருந்து மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்து வரப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில், அப்பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.