tamilnadu

img

பொதுமக்கள் தவற விட்ட சுமார் ரூ.3.71 கோடி மதிப்பிலான மீட்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவற விட்ட சுமார் ரூ.3.71 கோடி மதிப்பிலான 2,300 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் தவறவிடும் செல்போன்களை கண்டுபிடிக்கக் கடந்த 2022 ஆம் ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப் பிரிவு துவங்கப்பட்டது.  இதன் மூலம் பொதுமக்கள் தவறவிடும் செல்போன்கள் குறித்து உரியப் புகார் பெற்று, IMEI நம்பர் கொண்டு அந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

அதன்படி 2024-ல் மட்டும் சுமார் 1,100 புகார்கள் பெறப்பட்ட நிலையில் அதில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.94.78 லட்சம் மதிப்பிலான 504 செல்போன்கள் மீட்கப்பட்டு அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று பொதுமக்களிடம் வழங்கினார். மேலும் இந்த செல்போன்களை திறன் பட கையாண்டு கண்டுபிடித்துக் கொடுத்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்  பேசிய அவர் :  கடந்த 2022 முதல் தற்போது வரை சுமார் ரூ.3.70 கோடி மதிப்பிலான 2,300 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்ட பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவை முக்கியமான வழக்கு இல்லை என்றாலும் கூட,  பொதுமக்களுக்கு ரூ.15,000 கொடுத்து செல்போன் வாங்குவது பெரிய விஷயமாக உள்ளது. அதன் காரணமாகவே இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செல்போன்கள் மீட்டுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

செல்போன் திருடும் வழக்கிலும் 15 பேர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  அதேபோல் நடப்பு ஆண்டில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதன் மூலம் ரூ1.20 கோடி மீட்கப்பட்டு பொதுமக்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.  சைபர் குற்றங்களைப் பொருத்தவரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் 3,200 சைபர் குற்றங்கள் நடைபெற்று உள்ளது. தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்யக்கூடாது. போதிய விழிப்புணர்வுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும்.

நடப்பு ஆண்டில் கோவை மாவட்டத்தில் 242 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கஞ்சா  மொத்த வியாபாரிகள் 10 குழுவினரை மடக்கிப் பிடித்துள்ளோம்.  அவர்களும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முறையாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விரைவில் அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவோம்.  அதைப் போல் கடந்த ஜூன் 30 வரை 1,039 போக்ஸோ  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதில் பத்து வழக்குகள் நிறைவடைந்து தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளோம் எனக் கூறினார்.