மதங்கள் சார்ந்து மயானத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
நாமக்கல், ஜூன் 11- குமாரபாளையம் அருகே சமத்துவ மயானத்தை, மதங்கள் சார்ந்து பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட குளத்துக்காடு பகுதியில், இந்து சமத்துவ மயானம் உள்ளது. இதில், கிறிஸ்தவர்கள் ஒரு பகுதியிலும், மீதமுள்ள பகுதிகளில் இந்துக்களும் இறந்தவர்களை அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில், கிறிஸ்தவர்கள், புதைத்த சடலங்கள் மீது சிலுவைகளை பதித்தனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மயானம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, மத அடையாளங்களை சவக்குளிகள் மீது அமைக்கக்கூடாது என்றனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், செவ்வாயன்று திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் உடன்பாடு ஏற்படாததால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், புதனன்று வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் நில அளவையர்கள் மயானத்தை அளவிடும் பணியினை தொடங்கினர். இதுகுறித்த தகவல் பரவியதையடுத்து பொதுமக்கள் மயானம் முன்பு திரண்டு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மயானத்தை அளவீடு செய்யக்கூடாது. மத அடையாளங்களைக் கொண்டு மயானத்தை பிரிக்கக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குமாரபாளையம் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அளவிடும் பணி நடைபெறாது என உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.