tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

பிளாட்பார்ம் டிக்கெட்டுடன்  நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை, செப். 27- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகளை வழியனுப்புவதற்காக உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் நடைமேடை டிக்கெட் எடுத்து செல்கின்றனர். இவர்களால் கடைசி நேரத்தில் ரயில் ஏறிச் செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நடைமேடை டிக்கெட்டுடன் நீண்ட நேரம் ரயில் நிலையத்தில் காத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் மதுசூதன ரெட்டி கூறியதாவது: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில்களும், விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன. சமீபகாலமாக வட மாநிலங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டோரும், 60 வயதுக்கும் மேற்பட்டோரும் ரயில்களில் சென்னைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் வீடுகளுக்கு தெரியாமல் வருகின்றனர். அவர்கள் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 162 வடமாநில குழந்தைகளும், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 85 குழந்தைகளும் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளைத் தவிர பொதுமக்களும் தூங்குவதற்காக வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு வரும் பலர் ரயில் நிலைய நடைமேடை அனுமதி டிக்கெட் எடுத்துக்கொண்டு விரைவு ரயில் பகுதியில் தூங்குகின்றனர். இப்படி நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி உண்டு. எனவே நடைமேடை டிக்கெட் எடுத்து நீண்டநேரம் ரயில் நிலையத்தில் தங்குவது விதிகளை மீறுவதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரம் அரசு இசைப் பள்ளியில் அக். 2  மாணவர் சேர்க்கை

காஞ்சிபுரம், செப். 27- காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் அக்டோபர் 2ஆம் தேதி மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. கலை பண்பாட்டுத் துறையின்கீழ், மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையுடன் நிகழாண்டு விஜயதசமியை முன்னிட்டு, வரும் அக்டோபா் 2-ஆம் தேதி மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கோட்டைக் காவல் கிராமம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல் என்கிற முகவரியில் செயல்பட்டு வருகிறது. இந்தப பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய 7 கலைப்பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சியளிக்கப்படுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சிகளில் சேரலாம். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள், பயிற்சி முடிவில் மாணவா்களின் கல்வித் தகுதிக்கேற்ப 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான அரசு சான்றிதழும் வழங்கப்படும். மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்து பயண சலுகையும் உள்ளது. வயது 16, 17 உடைய மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி மற்றும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் அனைத்து மாணவா்களுக்கும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இசைப் பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு தனியாா் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணி புரியவும், கோயில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்படும். தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை பயிலுவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பள்ளியில் சோ்ந்து பயில நா.ரமணி, தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப் பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம்-631502 என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, இசைப்பள்ளி தலைமை ஆசிரியை கைப்பேசி எண் 94425 72948 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.