tamilnadu

img

பிஎஸ்என்எல்-க்கு 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை உடனடியாக வழங்கிடுக!

பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5ஜி சேவையை உடனடியாக தொடங்கிட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திடீரென கட்டண உயர்வை அறிவித்த நிலையில், பலர் தங்களது தொடர்பு எண்களை ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு மாற்றி வருகின்றனர். இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ வஞ்சிக்காதே, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தேவையான நிதியுதவியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். தொலைத்தொடர்பு துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முழுக்கங்கள் எழுப்பினர்.

முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அர்ஜுன், மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.