கோவை மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக்கோரி கோவை மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தினார்.
கோவை மாநகரத்தின் மையப்பகுதிகளிலும், சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, குறிச்சி, சுந்தராபுரம் உள்ளிட்ட கோவை மாநகராட்சியில் புதிதாக இனைக்கப்பட்ட பகுதிகளிலும் சாலை, சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் இதுவரையில் தீர்க்கப்படாமல் உள்ளது. மேலும் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து கோவை மாநகரத்திற்குள் ஒதுக்கப்பட்ட திட்டங்கள் இதுவரை துவக்கப்படாத நிலை உள்ளது. இந்நிலையில் ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை முழுமையாக பயன்படுத்தி திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தவும், பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணவும், பூங்கா உள்ளிட்டவைகளை முறையாக பராமரிக்க வலியுறுத்தியும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோவை மாநகராட்சி ஆனையர் பெ.குமரவேலை செவ்வாயன்று சந்தித்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆனையரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
முன்னதாக இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிபிஐ மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், துணை செயலாளர் சிவசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.