கோவையில் சாலையில் சுற்றித்திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை தன்னார்வலர்கள் உதவியுடன் பிடித்து அவர்களுக்கு முடிதிருத்தம் செய்து ,குளிக்க வைத்து, வேறு ஆடை அணிவித்து அவர்களை காப்பகங்களில் சேர்க்கும் பணியினை கோவை மாநகர காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 144 உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கோவையில் முக்கிய வீதிகள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் வர அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கோவையின் சில பகுதிகளில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும், ஆதரவற்றவர்களும் ஆங்காங்கே தெருவில் உலவுகின்றனர். கோவை மாநகர காவல் துறையினர் தன்னார்வலர்கள் சிலர் உதவியுடன் அவர்களுக்கு முடி திருத்தம் செய்து , குளிக்க வைத்து உணவு கொடுத்து, வேறு உடை அணிவித்து காப்பகங்களில் தங்க ஏற்பாடு செய்துள்ளனர். கோவை மாநகர காவல் துறையினரின் இந்த பணி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேசமயம் கோவையில் 144 உத்தரவைத் தொடர்ந்து பொருட்கள் வாங்க வெளியே வந்த மக்களை அடித்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.