கோயம்புத்தூர்:
சுயவேலை வாய்ப்பு என்ற அடிப்படையில் பல்வேறு வகையான சாலைப் போக்குவரத்து வாகனங்களை இயக்கி அதன்மூலம் வருவாய் ஈட்டி வரும் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள், தங்களது வாகனங்களுக்கு, ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மாதாந்திர கடன் தவணையை செலுத்த இயலவில்லை; கடன்தவணை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஆறு மாதக் காலத்திற்கு நீட்டித்துஉதவிட வேண்டுமென்று மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமனுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மக்களவை தலைவரும், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர், நிதியமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் மத்தியஅரசு கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவித்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்தும், பொது போக்குவரத்து வாகனங்களும் முற்றிலும் நிறுத்தப்பட்டன.பெரும்பகுதி சிறு வாகன உரிமையாளர்கள் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வாகனங்களை இயக்கி வரும் காரணத்தால் ஊரடங்கு காரணமாக வாகனங்கள் இயங்காத6 மாத காலத்திற்கு மத்திய அரசு செப்டம்பர்.30 ஆம் தேதி வரை கடன் தவணையை செலுத்துவதற்கு விதிவிலக்கு அளித்தது.செப். 30 ஆம் தேதி முடிந்துள்ள நிலையில்இப்போதே நிதி நிறுவனங்கள் நிலுவையிலுள்ளஅசலையும், வட்டியையும் கடன் தொகைகளையும் திரும்ப செலுத்த நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
பொது போக்குவரத்து சேவைத்துறையில் பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்களான லாரி, கனரக வாகனங்கள், டூரிஸ்ட் டாக்சி, கால்டாக்சி, மேக்சிகேப் வாகனங்கள், சிறிய சரக்கு வாகனங்கள், ஆட்டோ உட்பட அனைத்தும் சுய வேலை வாய்ப்பு என்ற அடிப்படையில் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தொழில் செய்து வாகனங்களை இயக்கி வருகின்றனர்.ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பின் மூலம் ஜூன் 1 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் வாகனங்கள் இயக்கலாம் என அரசு அறிவித்தாலும், வாகனங்கள் முழுமையாக இயங்காத நிலையே உள்ளது. சுற்றுலா தளங்கள், கோவில்கள், மால்கள்முழுமையாக திறக்காத காரணத்தால் வாடிக்கையாளர்கள் முழுமையாக வருவதில்லை.தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கால் டாக்சிகளுக்கு போதுமான வருமானமின்றி உள்ளனர்.மக்கள் பயன்பாடு மிக குறைவாக உள்ளது போன்ற காரணங்களால் பயணிகள் போக்குவரத்து சேவைத்துறை கடுமையான நெருக்கடியில் உள்ளது. லாரி மற்றும் சரக்கு வாகனங்களுக்கு எவ்வித வருமானமும் இல்லை.
எனவே மேற்கண்ட தொழிலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.எனவே மத்திய அரசு மேற்படி சூழ்நிலையை கணக்கில் எடுத்து நிதி நிறுவனங்களில் பெற்ற தவணைத் தொகை செலுத்துவதற்கு மேலும் 6 மாத காலத்திற்கு விலக்களிக்க வேண்டும்; மேலும் நிதி நிறுவனங்கள் கூட்டு வட்டியைதளர்த்தவும், கெடுபிடி செய்யாமல் இருக்கவும்உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மோட்டார் தொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.