tamilnadu

img

லாரி ஓட்டுநரிடம் பணம் பறித்த போலி சி.ஐ.டி  போலீஸ்....!

கோவையில் சி.ஐ.டி  போலீஸ் என கூறி லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
கோவை எல்.என்.டி பைபாஸ் சாலையில் மதுக்கரை அருகே சென்னையை சேர்ந்த நாகராஜ் என்பவர் மினி லாரி ஒன்றை ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையின் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு ஓட்டலுக்குள் சாப்பிட சென்றுள்ளார்.திரும்பி வந்த  போது லாரியின் அருகே இருந்த 4பேர் தாங்கள் சி.ஐ.டி  போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு லாரியை சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த நான்கு பேர் மது போதையில் இருந்ததால் சந்தேகமடைந்த ஓட்டுநர் நாகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து அந்த 4 பேரும் நாகராஜனை அடித்து பணம் பறித்து உள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து தப்பித்து அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவிக்க ஓட்டல் உரிமையாளர்கள் ரோந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை விரட்டி பிடித்துள்ளனர். இதில் ஒருவர் தப்பித்து சென்ற நிலையில் மூன்று பேரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் மூன்று பேர் கோவை கரும்புகடையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தப்பியோடிய இவர்களது நண்பரை மதுக்கரை போலீசார் தேடி வருகின்றனர்.