tamilnadu

img

இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ்; கருத்தியல் ரீதியாக மட்டுமல்ல நேருக்கு நேர் மோதுவதற்கும் தயாராக வேண்டும் - எம்.ஏ.பேபி ஆவேசம்

இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ்-சை கருத்தியல் ரீதியாக மட்டுமல்ல, நேருக்கு நேராக மோதுவதற்கும் தயாராக வேண்டும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி தெரிவித்தார்.

ஏ.ஜி.நூரானி எழுதி ஆர்.விஜய்சங்கர் ராமச்சந்திரன் மொழிபெயர்ப்பில்  ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் என்கிற நூல் வெளியிட்டு விழா கோவையில் திங்களன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கோவை மசக்காளி பாளையம் ஹர்சா மஹாலில் நடைபெற்ற நிகழ்விற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். தமுஎகச மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன் வரவேற்புரையாற்றினார்.  

இந்நிகழ்வில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சருமான எம்.ஏ.பேபி நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இந்நூலினை தமிழில் மொழிபெயர்த்த பிரண்ட் லைன் இதழின் ஆசிரியர் ஆர்.விஜய்சங்கர் ராமச்சந்திரன் மற்றும் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், கலை இலக்கிய பெருமன்றத்தின் வழக்கறிஞர் சுப்பிரமணியம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், பாரதி புத்தகலாயத்தின் நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.  

முன்னதாக, இந்நூலினை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மாநில முன்னாள் கல்வி அமைச்சருமான எம்.ஏ.பேபி வெளியிட்டு பேசுகையில், ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கான அச்சுறுத்தல் என்று இந்நூலின் தலைப்பில் உள்ளது. ஆனால் இந்நூலை முழுமையாக வாசிப்பவர்களுக்கு  இந்தியாவிற்கே பேரழிவை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ் என்பது தெரியவரும். 91 வயது நிரம்பிய ஏ.ஜி. நூரானி பல்வேறு ஆதாரங்களுடன் இந்நூலை படைத்துள்ளார்.

இதனை மிக அற்புதமாக தமிழில் ஆர்.விஜய்சங்கர் மொழி பெயர்த்துள்ளார். தன்னுடைய இதழியல் பணிகளுக்கிடையே மிக சிரத்தை எடுத்து தமிழில் மொழிபெயர்த்து விஜய்சங்கர் வெளியிட்டுள்ளார். இந்நூல் பல்கலை களஞ்சியமாக, கலை படைப்பாக, அறிவார்ந்த படைப்பாக திகழும் என்று உறுதியளிக்கிறேன். இந்நூல் வெளிவருவதற்கான முயற்சியை மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தியா என்கிற கருத்தை ஆதரிக்கக்கூடிய பக்கபலமாக இருக்கக்கூடிய நாம் அனைவரும் இந்தியர்கள் என்கிற உணர்வோடு இருக்கிறோம். ஒன்றிணைந்து இருக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை, ஒன்றுபட்ட இந்தியா என்கிற கருத்தியலை பாதுகாப்பதில் தமிழ்நாடு, கேரளா இந்த இரு மாநிலங்கள் முன்னணியில் இருக்கிறது. இந்திய குடிமகன் என்கிற வகையில் வெவ்வேறு சமயத்தை சார்ந்தவர்கள் இருக்கலாம், எம்மதமும் சம்மதமே என்கிற சமத்துவத்தை பாதுகாத்து வருகிறோம். காந்தி, நேரு, பெரியார் போன்ற தலைவர்களுக்கு மதம் குறித்து பல்வேறு வித்தியாசமான கருத்துகள் உள்ளது. மகாத்மா காந்தி, தான் ஒரு சனாதன இந்து என்றே அறிவித்தார்.

இப்படியாக சனாதன இந்துவை இந்துத்துவ தீவிரவாத ஆர்எஸ்எஸ் இயக்கம் ஏன் சுட்டுக்கொல்ல வேண்டும். ஏனென்றால் காந்தி தன்னை ஒரு சனாதன இந்து என்று மட்டும் சொல்லிக் கொள்ளவில்லை. மாறாக இந்துவாக மட்டுமில்லை, இஸ்லாமியனாக, புத்தனாக, சீக்கியனாக, ஜெயினாக இருக்கிறேன் என்று மற்ற மதங்களின் பால் அன்பு காட்டக்கூடிய தலைவராக இருந்தார் என்பதற்காகவே ஆர்எஸ்எஸ் அமைப்பால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  ஆர்எஸ்எஸ் அமைப்பு முக்கியமான மூன்று எதிரிகள் யார் என வரையறுத்துள்ளனர். இதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட்டுகள் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளனர். மக்கள் பல்வேறு அடையாளங்களுடன் வாழ்கிறார்கள். ஆனால் பாசிச சக்திகள் குறிப்பிட்ட இனம், குறிப்பிட்ட நிலம் என்றும், குறிப்பிட்ட இனத்திற்கு என நிலம் என அடையாளப்படுத்துகிறார்கள்.

ஆனால் உண்மையில் மனித குலத்தின் ஜீன் எடுத்து ஆய்வு செய்ததில் குறிப்பிட்ட இனம் என்கிற ஏதும் இல்லை என்பதும், அது எல்லா இனங்களிலும் கலப்பு நடந்துள்ளது என்பது ஆய்வில் நிருபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கான அஸ்திவாரமே மதங்கள் பலவாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்கிற உணர்வோடு இருக்கிறோம். அதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இடையூறாக உள்ளது. இந்த ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு கலவர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின், அமைப்பு சட்டமே காந்தியின் கொடூர படுகொலைக்கு பின்னர்தான் உருவாக்கினார்கள். நாங்கள் ஒரு கலாச்சார தேசியவாதத்தை முன்னிறுத்துகிற அமைப்பு என ஆர்எஸ்எஸ் சொல்கிறது. ஆனால் கலாச்சாரம் என்பதும் தேசியவாதம் என்பதும் வெவ்வேறு கருத்துகளை கொண்டது. கலாச்சாரங்கள் மனிதனை மேம்படுத்த வேண்டும் என்றுதான் நாம் கருதுகிறோம். ஆனால் ஆர்எஸ்எஸ் முன்னிருத்துகிற கலாச்சாரம் மிக மோசமானது என்று அன்றே ரவீந்திரநாத் தாகூர் வெளிப்படுத்தியுள்ளார்.

நாசிசம், பாசிசம் என்கிற சொல்லாடலை நாம் பயன்படுத்துகிறோம். ஹிட்லரின் கட்சியின் பெயர் ஜெர்மானிய சோசலிச தொழிலாளர் கட்சி என்பதாகும். அப்படியென்றால் ஹிட்லர் சோசலிசத்திற்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் கட்சியை நடத்தினர் என்றா சொல்ல முடியும். ஆர்எஸ்எஸ்-சும் ஜெர்மானிய தீர்வுதான் நமக்கானது என்று அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அந்த அமைப்பு சட்டத்தின் குரூரங்களை இந்நூல் அம்பலப்படுத்துகிறது, நிர்வாணப்படுத்தி காட்டியிருக்கிறது.  

சமீபத்தில் ஹரித்துவாரில் மத நாடாளுமன்றம் என்று ஒன்று நடைபெற்றது. இதில் பிரதமர், உள்துறை அமைச்சர், உபி முதல்வர் யோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் வழிமொழிந்த அனைவரும் ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிக்க வேண்டும் என்று பகிரங்மாக அறைகூவல் விடுத்தனர். இதனை அங்கிருந்த பிரதமர் உள்ளிட்ட யாவரும் மறுத்து பேசவில்லை என்பதை நினைவு கூர்கிறேன். இது இவர்களின் அடிப்படை தத்துவமாகும். இந்த இன அழிப்புக்கான திட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருவதை  ஜனசைட் வாட்ச் என்கிற அமைப்பு ஆய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளது. தன்னார்வலர் தொண்டு நிறுவனமான இவ்வமைப்பு உலகம் முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை வெளிப்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாகத்தான் இந்தியாவிலும் இத்தகைய இன அழிப்பு திட்டங்கள் நடைபெறும் என வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில்தான் நாம் என்ன செய்ய வேண்டும். இந்த மரண வியாபாரிகளை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு எதிராக போராட வேண்டும். இதற்கான பரந்து விரிந்த எதிர்ப்பு மேடையை உருவாக்க வேண்டும். பின்தங்கிய தத்துவத்தை வைத்துள்ள ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறார்கள். உயரிய மனித குலத்தை காக்கும் தத்துவத்தை கொண்டிருக்கிற நாம் இதனை வெற்றிகரமாக்கிட கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டும். அனைத்து அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். கருத்தியல் ரீதியாக மோதுவது மட்டுமல்ல, தேவைப்பட்டால் உடல் ரீதியாக நீயா நானா என நேருக்கு நேர் மோதுவதற்கும் தயராக வேண்டும் என்றார்.

ஜி.ராமகிருஷ்ணன்

இதைத்தொடர்ந்து, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், இந்நூலை எங்கு வெளியிடுவது என கலந்தாலோசனை செய்கிறபோது கோவை நகரத்தில் வெளியிட்டால்தான் சிறப்பாக இருக்கும் என முடிவெடுத்தோம். கடந்த ஜனவரி 30 காந்தியின் நினைவு நாளில் காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றார் என்று பேசினேன். அப்போது, அப்படி சொல்லக்கூடாது என்று இங்குள்ள காவலர்கள் தர்க்கம் நடத்தி தள்ளு முள்ளு ஏற்படுத்தியதை அனைவரும் அறிவீர்கள். இதுபோன்றுதான் ஆர்எஸ்எஸ்  ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜகவை பயன்படுத்தி அரசு இயந்திரத்தில் ஊடுருவி அதை வகுப்புவாதமயமாக்கும் செயலை ஆர்எஸ்எஸ் திட்டமிட்ட முறையில் செய்து வருகிறது. நீதித்துறையை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், அதில்  எவ்வாறு ஊடுருவுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்களாக உள்ளன. பண்பாட்டுத்துறையில் ஊடுருவல், திரைப்பட தணிக்கையில் மேலாதிக்கம் செலுத்தும் ஏற்பாட்டை பாஜக அரசு செய்து வருகிறது.

இதன்படி தணிக்கைத்துறை ஒப்புதல் கிடைத்தாலும் ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை என்றால், அந்த திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தில் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்படுவது குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆர்எஸ்எஸ் விரும்பும் கருத்துகளை வெளிப்படுத்தும் இந்த திரைப்படத்துக்கு பிரதமரே நற்சான்று அளித்துள்ளார். பாசிச தன்மைகொண்ட ஆர்எஸ்எஸ் பாஜகவை வழிநடத்துகிறது. பாஜக ஆட்சியில் இருக்கும்போது, அரசு அதிகாரம் மற்றும் அரசு இயந்திரத்தின் கருவிகளை ஆர்எஸ்எஸ்-சால் எளிதாக ஆட்டிப்படைக்க முடிகிறது. இந்தியாவில்,  இந்து ராஸ்ட்டிராவை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தோடு பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டை சிதைக்கிறது.

அரசு அமைப்புகள், நிர்வாகம், கல்வி, ஊடகங்கள், பண்பாட்டுத்துறை, வரலாறு போன்றவற்றை காவி மயமாக்கி வருகிறது. பெரும்பான்மை வகுப்புவாதத்தின்  வளர்ச்சி என்பது சிறுபான்மை வகுப்புவாதத்தை தூண்டிவிட்டு தேச ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்பதாக அமையும். இந்திய அரசியில் அமைப்பு சட்டத்தில் நான்கு அடிப்படைத் தூண்களை தகர்க்கிறது. மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகியவை தாக்குதலுக்க உள்ளாகி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்நூல் ஆர்எஸ்எஸ் குறித்து அம்பலப்படுத்தியுள்ளது. இதனை பரவலாக முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.  

பீட்டர் அல்போன்ஸ்  

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், பட்டினி குறியீட்டில், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், வேலை வய்ப்பில், சுகாதாரத்தில் என அனைத்திலும் மோடியின் ஆட்சியில் நமது நாடு மிகவும் பின் தங்கியுள்ளது. பாகிஸ்தான், நேபாள், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கூட நமக்கு முன்னே உள்ளது. இருப்பினும் தேர்தல்களில் பாஜக வெல்கிறதே என்கிற ஆச்சரியத்திற்கு இந்நூல் பதில் அளிக்கிறது. இதனை முழுமையாக வாசித்தால் இவர்களை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற விடையும் உள்ளது. இவர்களின் யுத்தி, தந்திரம், பொய் பித்தலாட்டங்கள் அனைத்தையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது. எதிர் வரும் காலத்தில் தேர்தல் களத்தில்  பாஜகவா அல்லது இந்தியாவா என்கிற நேர் கோட்டில் இதனை எதிர்கொள்ள வேண்டும். கட்சிகள் தங்களின் எல்லைகளை மறந்து இணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விஜய்சங்கர்

நூலின் மொழிபெயர்ப்பாளர் விஜய்சங்கர் பேசுகையில், எப்படி துணிச்சலோடு இந்நூலை மொழி பெயர்த்தீர்கள் என நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். என்னுடைய துணிச்சல் என்னுடைய தந்தையார் பி.ஆர்.சி.யிடமும், தயார் ஜனகியிடமும் இருந்து பெற்றது. நீங்கள் ஊடகத்துறை சார்ந்தவர் நடுநிலையோடு இருக்க வேண்டாமா என கேட்கின்றனர். அவர்களுக்கான பதில் நடு நிலை என்பது போலியானது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புவதே பத்திரிகையாளரின் வேலை. அதனை என்னளவிற்கு உரிய பங்கினை ஆற்றி வருகிறேன். இந்த காலத்தில் இந்நூல் தமிழ் சமூகத்தின் கைகளில் சேர வேண்டும் என்கிற உந்துதலும், அக்கறையும்தான் என்னுடைய இதழியல் பணிகளுக்கிடையேயும் இந்நூலை வெளிக்கொண்டு வந்துள்ளேன். சமூகத்தின் மீதான அக்கறை உள்ள யாவருக்கும் நேரம் தானாக வந்துவிடும் என்றார்.  

முன்னதாக, இந்நிகழ்வில் நூலாசிரியர் விஜய்சங்கரின் தாயார் ஜானகி உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர். மேலும்,  அரங்கம் நிறைந்த நிகழ்வில் வீரமணி, தஞ்சை தமிழ்வாணன் கலைக்குழுவின் இசை நிகழ்வு உள்ளிட்டவை நடைபெற்றது. நிறைவாக தமுஎகச மாவட்ட தலைவர் தி.மணி நன்றி கூறினார்.

;