தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது உடனடியாக சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.
கோவை ஆவாரம்பாளையத்தில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி இரவு 10 மணியை தாண்டி அண்ணாமலை ஒலிபெருக்கியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதனிடையே தங்களைத் தாக்கிய பா.ஜ.கவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக, சிபிஎம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது இன்று வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதை அடுத்து, தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்த அண்ணாமலை மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வரும் அண்ணாமலை மீது உடனடியாக சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.