பூக்களை சிதைத்தாலும் வசந்தம் வருவதை ஒருபோதும் உங்களால் தடுக்க முடியாது என்கிற எழுச்சிகர முழக்கத்தோடு சிஐடியு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சம்மேளன 15 ஆவது மாநாடு கோவையில் பேரெழுச்சியோடு துவங்கியது.
கோவை சிங்காநல்லூரில் உள்ள சாய் விவாக மஹாலில் மன்னார்சாமி நினைவரங்கத்தில் ஜூன் 19 துவங்கி 21வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் துவக்க நிகழ்வு ஞாயிறன்று அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் எழுச்சி முழக்கத்தோடு துவங்கியது.
முன்னதாக மாநாட்டில் சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி, வென்மணி தியாகிகள் ஜோதி, சேலம் சிறைத்தியாகிகள் ஜோதிகளும், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்கான போராட்டத்தின் முன்னத்தி ஏர்களான தோழர்கள் ஜே.ஹேமச்சந்திரன், மதுரை தியாகிகள், அக்னிஸ் மேரி, பொன்மலை தியாகிகள், பி.ராமமூர்த்தி, வி.பி.சிந்தன், சிங்காரவேலர் ஆகிய தியாகிகளின் ஜோதிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநாட்டு திடலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எழுச்சி முழக்கத்தினிடையே தலைவர்கள் பெற்றுக்கொண்டனர்.
15 ஆவது மாநில மாநாட்டு கொடியை சங்கத்தின் மூத்த தோழரும், கோவை அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் கௌரவ தலைவருமான பா. காளியப்பன் செங்கொடியை ஏற்றிவைத்தார். இதனைத்தொடர்ந்து தியாகிகளை நினைவு கூறும் வகையில் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர். மாநாட்டிற்கு சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வி.தயானந்தம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வரவேற்புரையாற்றினார்.
மாநாட்டை சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.கே.திவாகரன் துவக்கிவைத்து உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. மாநாட்டு வேலை அறிக்கையை சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் மற்றும் வரவு செலவு அறிக்கையை பொருளாளர் வி.சசிகுமார் முன்வைத்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பொதுக்கருத்தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவைகள் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் பணி நிலமை, போராடிப்பெற்ற உரிமைகளை பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு, பொது போக்குவரத்தை பலப்படுத்த வேண்டிய அவசியம், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய தேவைகள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளனர். இதனைத்தொடர்ந்து மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
இம்மாநாட்டிற்கு மாநிலம் முழுவதும் இருந்து 600க்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் பிரதிநிதிகளாக பங்கேற்றுள்ளனர்.