மேட்டுப்பாளையம், மே 6- ஊராட்சிகளில் ஐம்பது சதவீத தொழிலாளர்களுடன் நூற்பாலைகள் இயங்கலாம் என அரசு அறிவித்தும் ஆலைகளை இயக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதால், கடனுக்கான வட்டியினை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் பகுதியில் செயல்பட்டு கொண்டிருந்த 98 நூற்பாலைகள் கொரோனா பரவல் ஊரடங்கையொட்டி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை செய்து மே 4 ஆம் தேதி முதல் கிராம ஊராட்சி மற்றும் 15 ஆயிரம் மக்கள் கொண்ட பேரூராட்சிகளிலும் உள்ள நூற்பாலைகள் ஐம்பது சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம் என அறிவித்தது. ஆனால் விலக்கு அளிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள 98 நூற்பாலைகளில் தற்போது வெறும் 5 ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
நாற்பது நாட்களுக்கு மேலாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில், ஏற்கனவே நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான நூல் தேங்கி கிடக்கின்றன. மேலும், பல்லடம், சோமனூர் பகுதிகளில் விசைத்தறிகளும், திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களும் இயங்காத காரணத்தினால் நூலுக்கான தேவை இல்லாத நிலை நீடிக்கின்றது. இதன் காரணமாக தற்போது அரசு அனுமதியளித்தும் நூற்பாலைகளை இயக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறும் நூல் உற்பத்தியாளர்கள், கடன் வாங்கி உற்பத்தி செய்யப்பட்ட நூல் தேக்கம் மட்டுமின்றி ஒன்றரை மாதமாக நூற்பாலைகள் இயங்காமலே மின் கட்டணம் செலுத்தி வருகின்றோம்.
இதுமட்டுமல்லாமல் இங்கு பணியாற்றி வந்த தொழிளார்களுக்கு உணவுக்கான தொகையினை வழங்கி வருவதால் கடும் இழப்பில் சிக்கி தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நூற்பாலைகள் பெற்றுள்ள கடனுக்கு மூன்று மாதங்கள் வரை வட்டியினை அரசு ரத்து செய்ய வேண்டும், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் வழக்கமான முறையில் முழுமையாக சீரடையும் வரை கடன் தவணை செலுத்த அவகாசம் தர வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.