எழுபத்தி ஏழாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் பாரம்பரியத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், கைவினைஞர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு ரூ.13,000 முதல் ரூ.15,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்தார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பொற்கொல்லர்கள், இரும்புத் தொழில் சார்ந்த வேலை செய்யும் தொழிலாளர்கள், சலவைத் தொழில் செய்பவர்கள், முடி திருத்துபவர்கள், கொத்தனார்கள் என்று தங்கள் கருவிகளைக் கொண்டு வேலை செய்து வருபவர்களுக்காக செப்டம்பர் பதினேழாம் நாள் விஸ்வகர்மா ஜெயந்தி அன்று அந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின அறிவிப்பிற்குப் பின்னர் பிரதமர் மோடி தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது.
குலத் தொழிலுக்கு வழிவகுக்கும் விஸ்வகர்மா திட்டம்
அந்தத் திட்டம் குறித்து ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் பேசிய பிரதமர் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அறிவித்த விஸ்வகர்மா திட்டத்திற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் திட்டம் குறித்து சில பகுதிகளில் மாறுபட்ட கருத்துகள் நிலவலாம் என்றாலும் இந்தத் திட்டம் இந்தியாவின் கைவினைத் திறனை இந்த உலகிற்கு வெளிப்படுத்திக் காட்டும் வகையில், நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவளிக்கின்ற வகையிலேயே இருக்கிறது’ என்று விஸ்வகர்மா திட்டம் மீது வைக்கப்படும் விமர்சனங்களை மறைமுகமாக பட்டும்படாமலும் சுட்டிக் காட்டியிருந்தார்.
பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு உடனடியாக விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிரான அறிக்கையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருந்தார் ‘வருணாசிரம தர்மமான சனாதன தர்மத்தை, சாதியைக் காப்பாற்றி நிலைக்க வைக்கும் தத்துவத்தைப் பாதுகாப்பதே கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ்–பாஜக ஆட்சியின் செயல்பாடாக உள்ளது. உயர்ந்தவன்–தாழ்ந்தவன்; தொடக்கூடியவன்–தொடக்கூடாதவன் என்று மனிதர்களை வேற்றுமைப்படுத்தி, அடிமைப்படுத்திய குலதர்மப் பாம்பு, பிரதமர் மோடி ஆட்சியில் திடீரெனப் படமெடுத்தாடி அதன் நச்சுப் பல்லை நீட்டிக் காட்டுகிறது இப்போதும்! குலதர்மத் தொழிலைப் புதுப்பித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தப்பட்ட அந்தப் பிறவி இழிவை மறைமுகமாகப் புதுப்பித்து, கிராமங்களிலும், நகரங்களிலும் அவரவர் குலத்தொழிலை கீழ்ஜாதியர் முப்பது லட்சம் பேர் விஸ்வகர்மா திட்டத்தில் செய்வார்கள் – அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாளில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டை உரையில் பேசியுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த அறிக்கையில் அந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராட வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வீரமணி விடுத்த அந்த அறிக்கையே அந்தத் திட்டம் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவலாம் என்று நிதியமைச்சரை ஒருவேளை பேச வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
‘பாரம்பரியமாக ஒரு தொழிலைச் செய்ய ஏன் வற்புறுத்த வேண்டும் – செருப்புத் தைப்பவர், துணி வெளுப்பவர், சிரைப்பவர் பிள்ளைகள் வேறு படிப்பைப் படித்து முன்னேற முடியாமலே இப்படி முட்டுக்கட்டை போடுவதை எப்படி ஏற்க முடியும்? தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை 1952-1953இல் ஓட ஓட விரட்டி, ஒழித்து சமத்துவ நாயகர் பச்சைத் தமிழர் காமராசர் துணையோடு, புது வாய்ப்புகளை உருவாக்கி வரலாறு படைத்த மண் பெரியார் மண்ணான திராவிட மாடல் ஆட்சி நடக்கும் இந்த மண்! தமிழ்நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு முன் புதைகுழிக்கு அனுப்பப்பட்ட குலக் கல்வித் திட்டம், ஆரியம், ஆர்.எஸ்.எஸ் ஆட்சியின் மூலம் மீண்டும் புதிய அவதாரம் எடுத்து, இந்தியா முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்டோரை வதைக்க – டாக்டராக, பொறியாளராக, வழக்குரைஞராக, நீதிபதியாக ஆகாமல் தடுப்பதற்கான திட்டமே புதிய குலதர்மத் தொழில் புதுப்பிக்கும் இந்தத் திட்டமாகும்! பெற்றோர்களே, புரிந்துகொண்டு, விழித்துக் கொள்வீர்! விடியல் ஏற்படுத்த ஆயத்தமாவீர்! தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சியும், அதன் ஆற்றல்மிகு முதல்-அமைச்சரும் தமிழ்நாடு இத்திட்டத்திற்கு ஒருபோதும் இசைவு தராது; கடுமையாக எதிர்க்கும் என்பதைப் பிரகடனப்படுத்துவதும் அவசர, அவசியம்!’ என்ற அழைப்பு அந்த அறிக்கையின் மூலம் விடுக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் ஆறாம் நாள் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஆகஸ்ட் 29ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணைச் செயலாளர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டனர். குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமாக இருக்கின்ற விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து முதல்கட்டமாக சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செப்டம்பர் ஆறாம் நாள் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நடைபெறவிருக்கும் இந்தப் போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டுவதாக அமையும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
கொரோனா தொற்றும், ஆத்மநிர்பார் பாரத் திட்டமும்
சாதி சார்ந்த தொழில்களை அந்தந்த மக்களிடமே தக்க வைத்துக் கொள்வது என்ற தங்களுடைய நீண்ட காலத் திட்டத்தைக் கைவிட்டு விடாமல் இந்திய நாட்டின் மீது அதனைத் திணிப்பதற்குத் தொடர்ந்து முயன்று வருகின்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் கண்ணசைவில் இயங்கி வருகின்ற பாஜக அரசைப் பொறுத்தவரை இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் ஒன்றும் புதிதாக வடித்தெடுக்கப்பட்ட திட்டமாக இருக்கவில்லை. ஹிந்து வலதுசாரிகளின் மற்ற திட்டங்களைப் போல இதுவும் அவர்களால் தொடர்ச்சியாக மறைமுகமாக முன்னெடுத்து வரப்பட்ட திட்டமாகவே இருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்னதாக கொரோனா நோய்த் தொற்றின் உச்சகட்டத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு தொழில்களும், தொழிலாளர்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலைமையில் மோடி தலைமையிலான பாஜக அரசு உரிய நிவாரணங்களை தேவையானவர்களுக்குத் தருவதில் முழுமையாகத் தோல்வியடைந்திருந்தது. பொது முடக்கத்தை நான்கு மணி நேரக் காலக்கெடுவிற்குள் அறிவித்துச் செயல்படுத்திய காரணத்தால் நாடு முற்றிலுமாக முடங்கிப் போனது. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் குறிப்பாக பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று பணி புரிந்து வந்த தொழிலாளர்கள் நாடெங்கிலும் மிக மோசமான பாதிப்பிற்கு உள்ளாகினர். உரிய போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படாததன் காரணமாக பல்லாயிரம் மைல்கள் கால்நடையாக நடந்தே தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிலைமைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். அந்த நடைப்பயணத்தின் நடுவே ஏராளமானோர் இறந்தும் போயினர்.
மோடி பொதுமக்களிடம் உரையாற்றுவது குறித்து பெரும்பாலும் பலரிடமும் அச்சம் ஏற்பட்டிருந்த நிலைமையில், நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு நாற்பத்தொன்பதாவது நாளான 2020ஆம் ஆண்டு மே பன்னிரண்டாம் நாளில் பிரதமர் மோடி இந்திய தேசத்திடம் ஐந்தாவது முறையாக உரையாற்றினார். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிற்கான தீர்வு என்ற வகையில் ஆத்மநிர்பார் பாரத் அபியான் என்ற ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தை அப்போது அறிவித்தார். இருபத்தியொன்றாம் நூற்றாண்டு இந்தியாவிற்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்து கொள்வதற்கான பொறுப்பைத் தாங்கள் சுமந்து கொண்டிருப்பதை மக்களிடம் நினைவூட்டும் வகையில் முப்பத்திமூன்று நிமிடங்களுக்குப் பேசிய மோடி அந்த உரையில் கிட்டத்தட்ட பாதி நேரத்தை தற்சார்பு இந்தியா மீதான தன்னுடைய பார்வையை விளக்குவதற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்.
கொரோனா காலகட்டத்தில் பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டத்தின் நோக்கம் குறித்து ‘மோடி அறிவித்துள்ள ஆத்மநிர்பார் பாரத் திட்டம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஹிந்துப் பொருளாதாரத்தை மறைமுகமாக அறிமுகப்படுத்துகின்ற திட்டமே’ என்ற தலைப்பில் 2020 ஜூலை 23 கேரவான் இதழில் சாகர் எழுதி வெளியான கட்டுரை நெருக்கடியான அந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய அடிப்படைச் சித்தாந்தத்தைச் செயல்படுத்துகின்ற வகையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்திட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெளிக்கொணர்ந்து காட்டியது.
ஆத்மநிர்பார் திட்டம் குறித்த அறிவிப்பு பற்றி எழுதிய அந்தக் கட்டுரையில் சாகர் ‘தன்னுடைய தலையெழுத்துக்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வது என்பதே ஆத்மநிர்பார் என்ற வார்த்தைக்கான மிகவும் துல்லியமான பொருளாக இருந்த போதிலும், அந்த வார்த்தை ஆங்கிலத்தில் தற்சார்பு என்று அதிகாரப்பூர்வமாக தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. நம்முடைய நினைவில் இன்னும் நீங்காதிருக்கின்ற 2020 பிப்ரவரி மாத மாரத்தான் பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆத்மநிர்பார் என்ற அந்த வார்த்தையின் உண்மையான பொருளுக்கேற்றவாறு 2020 மே பதின்மூன்றாம் நாள் அந்தப் பொருளாதாரத் தொகுப்பை வெளியிட்டு பேசத் தொடங்கினார். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு பத்திரிகையாளர் சந்திப்புகளில் அந்த பொருளாதாரத் தொகுப்பு குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டு வந்தார். பிரதமர் வாக்குறுதியளித்திருந்த இருபது லட்சம் கோடி என்ற அளவிற்கும் மேலாக, அவரையே தோற்கடிக்கும் விதத்தில் மொத்தம் 20.97 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் தொகுப்பை அந்த ஐந்து நாட்களில் நிதியமைச்சரால் அறிவித்துக் கொள்ள முடிந்தது. ஆயினும் மிகப்பெரிதாக அறிவிக்கப்பட்ட அந்தப் பொருளாதாரத் தொகுப்பு பயன் எதையும் அளிக்கும் வகையில் இருக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
உத்தரப்பிரதேசத்தில் விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா
பொதுமுடக்க காலத்தில் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிய தொழிலாளர்களிடமுள்ள திறன் குறித்த தரவுகளைத் தயாரித்துக் கொள்வது ஆத்மநிர்பார் என்ற தற்சார்பு சமூக-பொருளாதார அமைப்பின் கீழ் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவாக இருந்தது. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட அந்த நடவடிக்கையை மாநில அரசுகளின் உதவியுடன் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறன்கள் குறித்த தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் அமைச்சகம், தொழிலாளர்களின் வீடுகளுக்கு அருகே கிடைக்கும் வேலை வாய்ப்புகளை அவர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் சான்றிதழ்களை வழங்கும் என்றே அந்தத் திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த திட்டத்தை முதலில் தொடங்கிய மாநிலங்களில் ஒன்றாக இருந்த உத்தரபிரதேச மாநிலம் ஆத்மநிர்பார் உத்தரப்பிரதேச ரோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தின்கீழ் அதனை நடைமுறைப்படுத்தியது. தொழிலாளர்களை உள்ளூர்த் தொழில்களில் ஒருங்கிணைத்து, தொழிலாளர்களின் வர்த்தகம் மற்றும் அவர்களிடமிருக்கும் திறன் தொடர்பான கடன் வசதிகளை வழங்குவதற்கு மாநிலத்தின் அந்தத் திட்டம் உறுதியளித்தது. இடம் பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட திறன் குறித்த தரவுகளை விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா (VSSY) என்ற பெயரில் இயங்கி வந்த மாநிலத்தின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயன்படுத்திக் கொள்வது என்று உத்தரப்பிரதேச மாநில அரசு முடிவு செய்தது. அவ்வாறு கடன் வசதிகளை வழங்கி நிதி அளிப்பதன் மூலம் பாரம்பரிய வர்த்தகங்களை விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா திட்டம் ஊக்குவித்து வருவதாகவும், அந்தத் திட்டத்தின் பயன்களைப் பெற்றுக் கொள்ளும் தகுதியைப் பெறுவதற்கு அந்தத் தொழிலாளி முடிதிருத்துபவர், தையல்காரர், தச்சர், செருப்பு தைப்பவர், மிட்டாய் தயாரிப்பவர், பனை இலைகள் வேய்பவர், நெசவாளர், இரும்பு கொல்லர், கொத்தனார், பொற்கொல்லர் என்று பாரம்பரியத் தொழில்களில் ஈடுபடுபவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பாரம்பரிய வர்த்தகங்கள் இந்தியாவில் பெரும்பாலும் சாதி சார்ந்தவையாக இருப்பது அனைவரும் அறிந்ததே. எடுத்துக்காட்டாக செருப்பு தைப்பவர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித்துகளாக, முடி திருத்துபவர்கள், பொற்கொல்லர்கள், இரும்பு கொல்லர்கள் மற்றும் மிட்டாய் தயாரிப்பவர்கள் பெரும்பாலும் சூத்திரர்களாக இருக்கின்றனர். ஆக மாநிலத்தின் அந்தத் திட்டம் குறிப்பிட்ட சாதி சார்ந்த தொழில்களுக்கு கடன் தருகின்ற திட்டமாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. தங்கள் பாரம்பரியத் தொழிலை விட்டு விலகி வேறு தொழில் நாடி வேறு மாநிலங்களுக்குச் சென்றிருந்த தொழிலாளர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களைத் தங்கள் சொந்த ஊர்களுக்குள்ளேயே அடைத்து வைக்கும் தந்திரமாகவே அந்தத் திட்டம் இருந்தது.
உத்தரப்பிரதேச முதல்வருடன் வீடியோ அழைப்பு மூலமாக இணைந்து, அந்த ஆத்மநிர்பார் உத்தரபிரதேச ரோஜ்கர் யோஜனாவை பிரதமர் மோடி 2020 ஜூன் 26 அன்று துவக்கி வைத்தார். அந்த வீடியோ அழைப்பின் போது விஸ்வகர்மா திட்டத்திற்கான தரவுகளை வழங்கிப் பேசிய யோகி ‘இன்று உத்தரப்பிரதேச விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா திட்டத்தின்கீழ் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய வர்த்தகர்களுக்குத் தேவையான கருவிகள் பிரதமரின் புனிதக் கரங்களால் விநியோகிக்கப்படுகின்றன. இந்த ஐயாயிரம் பாரம்பரிய வர்த்தகர்களில், 1650 பேர் தையல்காரர்கள், 1088 பேர் இரும்பு கொல்லர்கள் மற்றும் பொற்கொல்லர்கள் போன்று உலோக வேலைகளில் ஈடுபடுபவர்கள், 250 பேர் கண்ணாடி தொடர்பான வேலைகளிலும், 130 பேர் மெத்தை தயாரிக்கும் வேலைகளிலும், 669 பேர் மிட்டாய் தயாரிப்புகளிலும், 212 பேர் முடி திருத்தும் பணியிலும், 137 பேர் கூடை செய்வதிலும், 120 பேர் மட்பாண்டங்கள் தயாரிப்பிலும், 95 பேர் கொத்தனார் வேலையிலும், 112 பேர் காலணி தயாரிப்பு வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர்’ என்ற தகவலை வெளியிட்டார்.
அந்த வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக உத்தரப்பிரதேச முதலமைச்சரை வாழ்த்திய பிரதமர் மோடி, ‘யோகியின் அரசு ஒன்றிய அரசின் திட்டத்தை அளவு குறையாமல் தரமான வகையில் செயல்படுத்தியிருக்கிறது. அதில் கூடுதல் திட்டங்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை என்றாலும், பயனாளிகளின் எண்ணிக்கையை உத்தரப்பிரதேச மாநில அரசு அதிகரித்துள்ளது. மாநில முதலமைச்சர் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் குறிக்கோளுடன் அவற்றை உண்மையாக இணைத்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டுக் கூறியிருந்தார். ஆக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள விஸ்வகர்மா திட்டம் மூன்றாண்டுகளுக்கு முன்னதாக கொரோனா நெருக்கடியில் நாடு சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேற்றம் செய்து பார்க்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அப்போதே சாதி சார்ந்த குலத் தொழில்களுக்கு மோடியின் ஆசியுடன் கடன் வசதிகளை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
தெங்கடியின் ‘மூன்றாவது வழி’
தொடர்ந்து இவர்கள் கொண்டு வரத் துடிக்கின்ற இதுபோன்ற திட்டத்தின் பின்னணியில் அதற்கான அடிப்படையாக தத்தோபந்த் தெங்கடி (1920 நவம்பர் 10 – 2004 அக்டோபர் 14) எழுதிய ‘மூன்றாவது வழி’ (The Third Way) என்ற புத்தகம் இருந்ததை சாகர் தன்னுடைய கட்டுரையில் சுட்டிக் காட்டி விளக்கியிருந்தார். 2004ஆம் ஆண்டு மரணமடைந்த தெங்கடி சங் பரிவாரத்தின் தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகம் சார்ந்த பிரிவுகளான பாரதிய மஜ்தூர் சங்கம் (1955), பாரதிய கிசான் சபா (1979) சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (1991) ஆகியவற்றை நிறுவியவர் ஆவார். 1964ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை இரண்டு முறை இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் சரிவடைந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எழுதிய ‘மூன்றாவது வழி’ என்ற அந்தப் புத்தகம் 1995ஆம் ஆண்டு மே மாதம் முதன்முதலாக வெளியிடப்பட்டது.
தெங்கடி முன்வைத்த கருத்துகள் குறித்து எழுதிய சாகர் ‘கொரோனா தொற்றின் போது பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய சமூக-பொருளாதார மாதிரி ஆர்எஸ்எஸ், பாஜகவின் தற்போதைய தலைமையால் உடனடியாகத் தயாரிக்கப்பட்ட திட்டமாக இருக்கவில்லை. மோகன் பகவத், ஹோசாபலே, மோடி போன்றவர்களால் இப்போது புகழ்ந்துரைக்கப்படுகின்ற தற்சார்பு, சுதேசி சமூக-பொருளாதார அமைப்பு போன்றவை ஏற்கனவே ‘மூன்றாவது வழி’ என்ற புத்தகத்தில் தத்தோபந்த் தெங்கடியால் மிகத் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளன. கம்யூனிசத்தின் சரிவு, முதலாளித்துவத்தின் சீரழிவு போன்றவை கருத்தியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட தெங்கடி பொருளாதாரம், சமுதாயத்தைப் பொறுத்தவரையிலும் ஹிந்து அணுகுமுறையே மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்கான புதிய மாதிரியாக இருக்கும் என்ற வாதத்தை தன்னுடைய புத்தகத்தில் முன்வைத்திருந்தார். சங் பரிவார அமைப்பின் ஹிந்து மேலாதிக்க கொள்கைகளுக்கு உண்மையாக இருக்கும் வகையில் இருந்த தெங்கடியின் அந்தப் புத்தகம், உலகளாவிய பொருளாதார அமைப்பு குறித்த ஹிந்துப் பார்வை, ஹிந்துப் பொருளாதாரம் என்று அவரால் குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளின் தொகுப்பைக் கோடிட்டுக் காட்டுகின்ற வகையிலேயே எழுதப்பட்டிருந்தது. சுதேசியக் கட்டமைப்பே நமது அரசியலமைப்பு என்பதை முன்மொழிந்த அந்தப் புத்தகம் பேரினவாத மனப்பான்மையுடன், சுதேசியக் கட்டமைப்பை ஆதரித்ததன் மூலமாக ஹிந்துக்களை உலகின் பிற பகுதிகளிடமிருந்து தனியாக ஒதுக்கியே வைத்தது’ என்று அதுகுறித்து மேலும் விளக்கியிருந்தார்.
ஹிந்துப் பொருளாதார அமைப்பு ஹிந்து மத நூல்களான வேதங்கள், ஸ்மிருதிகள், சாஸ்திரங்கள், பிற பிராமண இலக்கியங்களில் வகுக்கப்பட்டுள்ள விதிகளால் நிர்வகிக்கப்படுவதாகவே இருக்க வேண்டும் என்பதே தெங்கடி முன்வைத்த முக்கியமான அம்சமாகும். விலை நிர்ணயம், தொழில்துறை உறவுகள், சமூக நலன் போன்றவற்றிற்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதற்கு தெங்கடி வேதங்களிலிருந்து சுலோகங்களை மேற்கோள் காட்டியிருந்தார். தான் முன்வைத்த கொள்கைகளின் செயல்திறனை, பொருத்தப்பாடை ஏற்கனவே அவர்களுடைய அமைப்புகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஹிந்து ஆட்சியாளர்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகளைப் பயன்படுத்தியே தெங்கடி தன்னுடைய புத்தகத்தில் நிரூபித்துக் காட்டியிருந்தார்.
சாதிகள் நிலைத்தால் நெருக்கடிகள் தீரும் – தெங்கடி
சுதந்திரத்திற்குப் பிறகு கடைப்பிடிக்கப்பட்ட இந்தியப் பொருளாதார மாதிரியை ‘மேற்கத்திய சிந்தனை’ என்று கூறி நிராகரித்த தெங்கடி, அனார்கிசத்திற்கே அது வழிவகுத்துத் தரும் என்றார். சர்வதேச உறவுகளை வளர்த்துக் கொள்ள உதவுகின்ற சர்வதேசவாதத்தை இந்தியாவின் பிரச்சினைகளுக்கான மூல காரணங்கள் என்று கருதிய காரணத்தாலேயே அவரிடம் மேற்கத்திய கருத்துகள் மீதான விரோதப் போக்கு இருந்து வந்தது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்வைத்த தாராளமயமாக்கலை ‘சுத்த முட்டாள்தனம்’ என்று கூறிய தெங்கடி சர்வதேசவாதத்தை நாட்டிற்குள் பரப்புவதாக அது இருக்கிறது என்ற குற்றச்சாட்டைச் சுமத்தத் தவறவில்லை.
இவையனைத்திற்கும் மேலாக சாதிகள் நிலைத்து நிற்க வேண்டும், அதுவே இந்தியச் சமுதாயம் எதிர்கொண்டு வரும் பிச்சனைகளுக்கான தீர்வாக இருக்கும் என்பதை வலியுறுத்திய தெங்கடி, ‘உலகளாவிய கருத்துகளை ஏற்றுக் கொண்டதன் மூலம், இந்தியாவில் சமூக நிறுவனங்களான இருக்கின்ற சாதி போன்ற அமைப்புகள் அழிந்து, மக்கள் வாழ்வில் மதத்திற்கு உரிய பங்கு இல்லாமல் போய் விட்டது’ என்றார். சாதிகள் நிலைகுலைந்து போனது, சமூகத்தில் மதக் கட்டமைப்பு இல்லாமல் போனது போன்ற காரணங்களே இந்த நாட்டைப் பீடித்திருக்கும் அனைத்து நெருக்கடிகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன என்ற கருத்தையும் அவர் முன்வைத்திருந்தார்.
‘உற்பத்தி, தகவல் தொடர்பு போன்ற நுட்பங்களில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியதன் காரணமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்து வந்த பாரம்பரிய வர்த்தகங்களில் பெரும்பாலானவை வழக்கற்றவையாக அல்லது பொருளாதாரரீதியாக சாத்தியமற்றவையாக மாறி விட்டன. அவற்றிற்குப் பதிலாக புதிய வர்த்தகங்கள் தோன்றியுள்ளன. அதன் விளைவாக பாரம்பரிய சாதியமைப்பு முற்றிலும் தகர்ந்து போயிருக்கிறது’ என்று எழுதிய தெங்கடியே சாதியொழுங்கை மீட்டெடுப்பதற்கான வழிமுறையாக தொழில்வாரியான அமைப்புகளை உருவாக்குகின்ற ஆலோசனையை முதன்முதலாக முன்வைத்தவர் ஆவார். ‘தொழில் அல்லது வர்த்தக குழுக்களின் ஒருங்கிணைப்பும், அமைப்பாக்கமும் தொடர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவத்தை அவர்களுக்கு வழங்கிட வேண்டும்… நமது மக்களில் பெரும்பான்மையானவர்களாக உள்ள விவசாயிகள், நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள், சுயதொழில் செய்யும் கைவினைஞர்கள், விவசாயம் மற்றும் வனத் தொழிலாளர்கள் போன்றவர்கள் இன்னும் அமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்படாமல் இருக்கிறார்கள். அவர்களைத் தொழில்வாரியாக ஒழுங்கமைப்பது விரைவுபடுத்தப்பட வேண்டும்’ என்றும் தெங்கடி கூறியிருந்தார். ஆக கொரோனா காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் திட்டம் தெங்கடியால் ‘மூன்றாவது வழி’ புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த கோட்பாட்டைச் செயல்படுத்துகின்ற வகையிலேயே உருவாக்கப்பட்டிருந்தது என்னவோ உண்மைதான்!
தெங்கடி எழுதிய ‘மூன்றாவது வழி’ என்ற அந்தப் புத்தகம் அவரைப் போன்று பிராமணராக இருந்த, ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்சாசலக் கோல்வல்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிநிலை சமூக அமைப்பான வர்ணாசிரமம், பிறப்புகளின் அடிப்படையில் மக்களை நான்கு பிரிவினராகப் பிரிக்கிறது. அந்த வரிசையில் பிராமணர்கள் மிக உயர்ந்தவர்கள், சூத்திரர்கள் மிகவும் கீழானவர்கள். அதே சமயத்தில் தலித்துகள் இந்தக் கட்டமைப்பிற்கு முற்றிலும் வெளியிலே நிறுத்தி வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அவர்ணா என்ற வர்ணம் அல்லாத நிலையே வழங்கப்படுகிறது. அவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாக மட்டுமே கருதப்படுகின்றனர். இந்தியாவில் உள்ள அத்தகைய சாதியமைப்பிற்கான அடிப்படையை ஊக்குவிக்கும் வகையிலேயே மோடியின் கண்காணிப்பில் கொரோனா காலகட்டத்தில் ஆத்மநிர்பார் திட்டத்தின்கீழ் உத்தரபிரதேச மாநிலம் அமல்படுத்திய திட்டம் இருந்தது என்று சொல்வதில் தவறேதும் இருக்கப் போவதில்லை. அந்தத் திட்டத்தையே பட்ஜெட்டிலும், சுதந்திரதின விழா கொண்டாட்டத்தின் போதும் அறிவித்து இப்போது அமல்படுத்தத் துணிந்திருக்கிறார்கள்.
தொகுப்பு: தா.சந்திரகுரு