கோயம்புத்தூர்:
ஏபிடி நிறுவனத்துடனான 2019- 2020 ஆண்டிற்கான போனஸ் குறித்த மூன்று கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து புதன்கிழமையன்று தற்செயல் விடுப்புபோராட்டத்திற்கு ஏபிடி நிறுவன தொழிற்சங்கங் களான சிஐடியு, ஐஎன்டியுசி கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
இதுகுறித்து ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏஆர்சி, என்ஐஏ குரூப் நிறுவன தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கூறுகையில், கோவையை தலைமையிடமாக கொண்ட ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏஆர்சி, என்ஐஏ குரூப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 1300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உள்ளன.இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான 2019 - 2020 ஆண்டிற்கான போனஸ் குறித்த பேச்சுவார்த்தை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களிடையே நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு வழங்கிய 13 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி 10 சதவீதம் மட்டுமே வழங்க முடியும் என ஏபிடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்திற்கு பிறகே கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மார்ச் மாதத்திற்கு முந்தைய வரவு - செலவு அடிப்படையிலேயே போனஸ் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் உறுதிபடத் தெரிவித்தன. ஆனால் நிர்வாகம் இதனை ஏற்கமறுத்தது. இதனால் மூன்று சுற்று பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து சிஐடியு மற்றும் ஐஎன்டியுசி தொழிற்சங்கங்கள் புதன்கிழமை (11.11.2020) தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இதனையேற்று ஏபிடி நிறுவனத்தின்அனைத்து கிளைகளிலும் உள்ள தொழி லாளர்கள் விடுமுறை கடிதத்தை நிர்வாகத்திடம் வழங்கினர்.