tamilnadu

உணவு ஒவ்வாமையால் பின்னலாடை நிறுவன தொழிலாளர்கள் 98 பேருக்கு சிகிச்சை

திருப்பூர், ஆக. 23- பல்லடம் அருகே பின்னலாடை நிறுவன உணவு விடுதியில் வியாழனன்று காலை உணவு உட்கொண்ட 98 தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம், அருள்புரத்தில் உள்ள ஒரு தனியார் பின்னலாடை நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வியாழக்கிழமை காலை அந்நிறுவனத்தின் உணவு விடுதியில் தொழிலாளர்கள் பருப்பு சாதம், எலுமிச்சை சாதம் சாப்பிட்டனர். இதில் 98 தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சைக்காக பல்லடத்தில் உள்ள மூன்று தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அவர்களை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் உணவு விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.