திருப்பூர், மே 24 -திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.சுப்பராயனுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் ராஜா எம்.சண்முகம் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரமாகத் திகழும் திருப்பூரின் குரலாக கே.சுப்பராயன் குரல் மக்களவையில் ஒலிக்கும். பின்னலாடைத் துறையின் வளர்ச்சிக்கும், ஏற்றுமதிக்கும் ஆன தேவைகளை நன்கு அறிந்து அதைநிறைவேற்றிட ஆக்கப்பூர்வமாக உதவிடுவார். மதிப்புக் கூட்டப்பட்ட பின்னலாடைத் துறை வளர்ந்தால் நூற்பாலைகள் மட்டுமின்றி பருத்தி விவசாயிகளும் பயனடைவர். பத்தாண்டுகளுக்கு முன்பு, ஊக பேர ஒப்பந்தத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்களும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச்சேர்ந்த ஏற்றுமதியாளர்களும் திக்குத் தெரியாமல் சிக்கித் தவித்த சமயத்தில் சுப்பராயன் பாதிக்கப்பட்டோரை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதியமைச்சர் ஆகியோரிடம் நேரில் அழைத்துச் சென்று சந்திக்க வைத்ததை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறோம். அதேநேரம் 2022ஆம் ஆண்டு திருப்பூர்பின்னலாடைத் தொழில் ரூ.1 லட்சம் கோடி வர்த்தக இலக்கை எட்ட அனைவரும் ஒருங்கிணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் இலக்கை நிச்சயம் அடைய முடியும்.மேலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்த முடியும் என்றும் ராஜா எம்.சண்முகம் கூறியுள்ளார்.