tamilnadu

வேளாண் பல்கலையில் மே 8ல் மாணவர் சேர்க்கை

கோவை, மே 4-தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை மே 8ம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து வேளாண்மை பல்கலைக்கழகம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். கலந்தாய்வு மாணவர்களின் தரவரிசை மற்றும் விருப்பத்திற்கேற்ப இணைய வழியில் நடைபெறும். சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கு தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவையில் மட்டும் நடைபெறும். காலியிடங்களை நிரப்புவதற்குவிருப்ப அடிப்படையிலான நகர்வு முறை கடைபிடிக்கப்படுகிறது. இணையதள விண்ணப்ப முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இம்முறையில் முதலில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தினுள் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு செய்ய வேண்டும். சிறப்பு இட ஒதுக்கீடுகளான முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுதாரர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பிரிவில் விண்ணப்பிப்போர் தேவையான சான்றிதழ்களை குறிப்பிட்ட நாட்களில் நேரில் கொண்டு வந்து சரிபார்க்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவு செய்தபின், விண்ணப்பக் கட்டணத்தை இணையதள கடன் அட்டை மற்றும் சேமிப்பு கணக்கு அட்டை வழியாக செலுத்தலாம். இணைய தளத்தில் மே 8 முதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம். இறுதி நாள் ஜுன் 7 ஆகும். விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய 3 நாட்கள், அதாவது ஜீன் 10 முதல் 12 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படவுள்ளது. சுதந்திரபோராட்டத் தியாகிகளின் சந்ததியினர், முன்னாள் ராணுவ வீரர்களின் மகன், மகள், தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் (5 சதவீதம்), வெளிநாடு வாழ் இந்தியர்கள், தொழில் நிறுவன உபயதாரர்களுக்கான ஜுன் 11 முதல் 13 வரை வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் ஜுன் 20 அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;