tamilnadu

img

ஏழைகளுக்கு உதவுற கம்யூனிஸ்ட்டு ஜெயிக்கணும் கட்டிய வீடுகளை பாதுக்காக்க போராடும் எம்ஜிஆர் நகர் மக்களின் எதிர்பார்ப்பு

கோவை - நாகப்பட்டணம் தேசிய நெடுஞ்சாலை அருகில் வேகமாக வளர்ந்து வரும் நகரம்சூலூர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு பல்லடம் தாலுகாவிலிருந்து பிரித்து சூலூர் தாலுகா அமைக்கப்பட்டது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக ஏழைகள் வசித்த குடிசைப்பகுதிகள்தான் ஆட்சியாளர்களின் கண்களுக்கு பட்டுள்ளன. ஏற்கனவே, பகத்சிங் நகர், பெரியார் நகரில் வசித்தமக்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். செங்கத்துறை அருகே நொய்யல் ஆற்றை ஒட்டிய பகுதியான புதுநகரில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் அவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.  அடுத்த கட்டமாக சூலூரின் மையமான பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரில் சுமார் 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி மேற்கெண்டு வருவதாக கூறுகிறார் ரமேஷ்குமார் (36). நான் பிறந்ததே இந்த வீட்டுலதான், எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாக இருந்தவர் எங்க அப்பா கிருஷ்ணசாமி. நாற்பது வருஷமா இங்க இருக்கிறவங்க அதிமுகவுக்க தான் ஓட்டு போட்டு வந்தாங்க. இந்த எம்ஜிஆர் நகருக்கு மேவாரம், கீவாரம் உள்ள வீடுகளுக்கு பட்டா கொடுத்தாங்க. அந்த இடங்களும் பெரிய குளத்தை ஒட்டிதான் இருக்கு. இத மட்டும் நீர்நிலை பகுதின்னு சொல்லி பட்டா தராம வீடுகளை இடிப்போம்னு மிரட்டறாங்க. பேய்மழ பெய்தாகூட இந்த இடத்தில வெள்ளப்பெருக்கு இருக்காது. பெரிய குளம் நிறைஞ்சதும் சின்ன குளத்துக்கும் அங்கேர்ந்து நொய்யல் ஆற்றுக்கும் மழைவெள்ளம் போயிடும். இந்த இடத்தை நில வகைமாற்றம் செய்து எங்களுக்கு பட்டா தரணும்னு தொடர்ச்சியா கேட்டுக்கிட்டே இருக்கோம். பி.ஆர்.நடராஜன் எம்பியா இருந்தப்ப எங்களகூட்டிட்டு போய் கலெக்டர்கிட்ட மனு கொடுத்து பேசினாரு. வசதியிருக்கிறவங்களுக்கு தான் மத்தவங்க உதவுறாங்க. அதிகாரம் இருந்தாலும் இல்லைன்னாலும் எங்களமாதிரி ஏழைங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகாரங்கதான் உதவுறாங்க, என்றார்.


அடுக்குமாடி குடியிருப்பின் அவலம்

செங்கத்துறை புதுநதரில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி வீடுகள் குறித்து அங்கு குடியிருக்கும் ஜென்சன் ஜேக்கப் கூறியதாவது, வாரத்துக்கு ரெண்டுநாள் வரும் தண்ணி ஒரு வீட்டுக்கு 2அல்லது 3 குடம் கிடைக்கும். சப்பத்தண்ணி ஒரு வீட்டுக்கு 250லிட்டர்தான் கிடைக்கும். அத வச்சிதான் குளிக்கணும், துவைக்கணும். நாங்க இங்க வந்த 5 வருஷத்துல எலக்சன ஒட்டி இப்பதான் கொஞ்சநாளா குப்ப எடுக்க ஆளு போட்டிருக்காங்க. மெயின் ரோட்டிலேர்ந்து 12 சோலார் விளக்கு போட்ட கொஞ்சம் நாளிலயே இரும்பு குழாயோட அறுத்து பேட்டரிய திருடிட்டாங்க. இருட்டின பிறகு பாம்பு, தேளுக்கு பயந்துகிட்டு வெளியே நடமாட முடியாது, என்றார். அருக்காணி என்ற பெண் கூறுகையில், இடிஞ்சு விழுந்துடுமோன்னு இங்க குடியிருக்கவே பயமா இருக்கு, நொய்யல் ஆறு பெருக்கெடுத்து இங்க வரைக்கும் வரும். இங்க ரேசன் கட கட்டியிருக்காங்க ஆனா 6கிலோ மீட்டர் போய் பழைய கடையிலதான் வாங்கறோம். மண்ணெண்ணெய் எல்லாம் கிடைக்காது. கறண்டு போனா இருட்டுலதான் இருக்கணும். எங்களோடு சேர்ந்து குழந்தைகள் எல்லாம் கதற கதற வலுக்கட்டாயமா எங்க வீடுகளையெல்லாம் இடிச்சு இங்கு கொண்டு வந்து தள்ளினாங்க. இதையெல்லாம் செஞ்சிட்டு ஓட்டு கேட்டும் வர்றாங்க ஈவு இரக்கம் இல்லாம என்றார். 

;