tamilnadu

குடியுரிமை சட்டத்தை எதிர்த்தால் அடக்குமுறையா?

திருப்பூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருப்பூர், டிச. 20 -  இந்திய மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், அதற்கு  எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவிய மத்திய மோடி அரசின் காட்டாட்சியை எதிர்த்தும் திருப்பூரில் கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை இந்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரவீன், சிக்கண்ணா கல்லூரி கிளைச் செயலாளர் கல்கிராஜ், கல்லூரி மாணவர் சங்க கமிட்டி உறுப்பினர்கள் துளசிமணி, சேகர், ஷாலினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக வகுப்புகளைப் புறக்கணித்து பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொள்ள  வந்தனர். இதையடுத்து வகுப்புகளை இடை நிறுத்துவதாக நிர்வாகம் அறிவித்தது. போராட்டத்தில் பங்கேற்ற மாண வர்கள் மத்திய அரசின் நாசகர குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர்.