tamilnadu

ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக சித்தப்பாவுக்கு கன்னத்தில் பளார்

திருப்பூர், ஏப். 23 -ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்ப்பட்டி பகுதியில் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததுடன், அதை நியாயப்படுத்தி பேசிய அதிமுக நிர்வாகியான சித்தப்பாவுக்கு, திமுக மாணவர் அணியைச் சேர்ந்த, அண்ணன் மகன் கன்னத்தில் அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 18ஆம் தேதி வாக்குப்பதிவு நாளன்று, தேர்பட்டி வாக்கு சாவடி பகுதியில் அதிமுக ஒன்றியத் துணை செயலாளர் நாட்டுதுரை என்பவருக்கும், திமுக ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ஆதித்யா என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.நாட்டுதுரை வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறி, அவரிடம் ஆதித்யா கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அவர் தனது செயலை நியாயப்படுத்தியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்து ஆதித்யா அவரை கன்னத்தில் அறைந்துவிட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.இந்நிலையில் நாட்டுதுரை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு சென்ற அலங்கியம் காவல்துறையினர் விசாரணை செய்தபொழுது இருவரும் உறவினர்கள் என்பதால் சமாதானமாகச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்யவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

;