திருவண்ணாமலை,நவ.15- தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரணமல்லூர் கிளை சார்பில் ‘களம் 12’ நிகழ்ச்சி, குழந்தைகள் விழாவாக நடைபெற்றது. பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் த.ஞானசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் கௌதம முத்து முன்னிலை வகித்தார். பொருளாளர் ப.தேவதாஸ் வரவேற்றார். குழந்தைகள் குறித்த கவிதைகளை கவிஞர்களான பெரணமல்லூர் சேகரன், பி.மாலவன், செங்கொடி ஆகியோர் வழங்கினர். பெரணமல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, பெண்கள் மேனிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய அரசுப் பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பாடல் போட்டி ஆகியவற்றை நடத்தி அவற்றில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி பெரணமல்லூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பெரணமல்லூர்.மீனாட்சி குழந்தைகள் குறித்த கவிதையுடன் சிறப்புரையாற்றினார். போட்டிகளில் வென்ற மாணவர்கள் பேசியும் பாடியும் நடித்தும் காட்டினர். முடிவில் கிளையின் இணைச் செயலாளர் இரா. ராஜசேகரன் நன்றி கூற நிகழ்வுகள் நிறைவடைந்தன. திரளாக மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.