திருவனந்தபுரம்:
பெண்களை அவமதிக்கும் வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்களில் பெண்களை அவதூறு செய்து பணம் சம்பாதிக்கும்முயற்சியை அனுமதிக்க முடியாது என்றும் கேரள சுகாதாரம்- சமூக நீதித்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்தார்.கேரள திரைத்துறையின் பிரபல குரல் மாற்று (டப்பிங்) கலைஞர் பாக்கியலட்சுமி, இவரையும் இவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தி தனது யூடியூப் சானலில் விஜய் பி நாயர் என்பவர் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். பொறுமை இழந்த பாக்கியலட்சுமி தனது தோழிர் இருவருடன் விஜய் பி நாயர் தங்கியிருந்த விடுதிக்கு நேரில் சென்றுபதிவுகளை நீக்க வலியுறுத்தினர். மறுப்பு தெரிவித்த நிலையில் அவர் மீது கருப்பு வண்ணம் பூசி கன்னத்தில் அறைந்தனர். அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெண்களை அவமதிக்கும் வீடியோவை யூடியூப் சேனலில் வெளியிட்ட தாக விஜய் பி நாயர் மீது சிட்டி சைபர் செல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மியூசியம்காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் மீது ஐபிசி பிரிவு509 இன் படி, கே.பி. சட்டத்தின் பிரிவு 120 இன் கீழும் வழக்கு பதிவாகி உள்ளது. பதிக்கப்பட்ட பெண்கள் சனியன்று (செப்.26) அளித்த புகாரின் அடிப்படையில் தம்பானூர் காவல் நிலையத்தில் விஜய் பி நாயர் மீது ஐபிசி பிரிவு354 இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்குகளில் காவல்துறையினருக்கு கிடைத்த புகார்கள் மற்றும் அறிக்கைகளின்அடிப்படையில், சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவழக்குகள் மீது தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், யூடியூப் சேனலில் சாந்திவிளா தினேஷ் என்பவர் அவதூறு செய்தது குறித்து உயர் தொழில்நுட்பக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் மியூசியம் காவல்துறையினர் மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவற்றை சுட்டிக்காட்டிய அமைச்சர் கே.கே.சைலஜா, கேரளாவில் இருப்பது பெண்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையையும் ஊக்குவிக்கும் அரசல்ல என செய்தியாளர்களி டம் தெரிவித்தார். சமூக ஊட கங்களில் பெண்கள் அவமதிப்பு செய்யப்பட்டால் ஒருபோதும் அரசாங்கம் வேடிக்கை பார்க்காது. அத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களை அவமதிக்கும் வகையில் பதிவிடுவோரை எந்த வகையிலும் ஊக்குவிக்கக் கூடாது. அவர்களின் யூடியூப் சானலில் குழு சேரவோ பகிரவோ வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.தங்கள் குடும்ப உறுப்பினர் களைப் பற்றி யாராவது சொல்லும்போது ஏற்படும் அதே வலியுடன் எல்லோரும் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களை இழிவுபடுத்துவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் இதுபோன்ற முயற்சிகளை அரசாங்கம்அனுமதிக்காது. இதுபோன்ற வர்களுக்கு எதிராக பொதுமக்கள் முன்நிற்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
சட்டம் கொண்டு வரவும் தயார்: முதல்வர்
கிடைக்கக் கூடிய ஊடக வசதிகளை தவறாகப் பயன்படுத்துபவர் களுக்கும், பெண்ணியத்தைத் தாக்கும் நபர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுள்ள சட்ட சாத்தியங்கள் அதற்கு போதுமானதாக இல்லாவிட்டால், பொருத்தமான சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்படும். தற்போது எழுந்துள்ள புகாரில் விரிவான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.