கேரள மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தில் பல்வேறு வகையான சாப்பாடுடன் கறி, பாயாசம் போன்றவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஏழை எளிய மக்களும் கல்வி கற்கும் நோக்கில் அவர்களை பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில், முதன்முதலாக காமராஜர் அவரது ஆட்சியின்போது மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி, குழந்தைகளுக்கு தினசரி முட்டை வழங்க உத்தரவிட்டார். பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மதிய உணவு தினசரி ஒவ்வொரு வகையானகலவை சாதங்களை போட உத்தரவிட்டார்.
இந்நிலையில், காலை உணவுத் திட்டம் அவசர அவசரமாக இஸ்கான் (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நிறுவனம்) அமைப்பின் அட்சய பாத்ரா என்ற இந்துத்துவா அமைப்பிடம் குழுமத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பு பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் உப்புச்சப்பில்லாத உணவை வழங்கும் என்று குழந்தை நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது. படிக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளரத் தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒருநாள் தேங்காய் சாதம், மற்றொரு நாள் வேறு வகையான சாதம் உள்பட காய்கறி சாலட், அத்துடன் சிக்கன் கறி மற்றும் பால் பாயாசம் போன்றவைகளும் வழங்கப்படுகின்றன. இது பள்ளிக் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.