tamilnadu

img

இதிலும் கேரளம் முன்மாதிரி: கொரோனாவிலிருந்து மீண்ட நாட்டின் மூத்த தம்பதிகள்

கோட்டயம், ஏப்.5 – முதியவர்களிடம் கொரோனா எளிதில் தொற்றிக்கொள்வதும், இத்தாலி போன்ற சில நாடுகள் அவர்களைக் கைவிட்ட அவல நிலையையும் உலகம் கண்டது. ஆனால், அதிலிருந்து மாறுபட்ட காட்சியை கேரளம் கண்டுள்ளது. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ரான்னியில் உள்ள அவர்களது வீட்டுக்கு தாமஸ் ஆபிரகாம் (93) அவரது மனைவி மரியம்மா தாமஸ் (88) ஆகியோரை மருத்துவமனை ஊழியர்கள் வெள்ளியன்று அன்புடன் வழியனுப்பி வைத்தனர். கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்ட நாட்டின் மிக வயதான தம்பதியர் இவர்கள் என்பதுதான் இவர்களது சிறப்பு.  இத்தாலியிலிருந்து வந்த மகனிடமிருந்துதான் இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியில் தனிமை வார்டில் மருத்துவர்களின் அன்பும், மருந்தும், கவனிப்புமாக 26 நாட்களில் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டனர். 26 நாட்கள் சிகிச்சைக்குப்பிறகு ஊர்திரும்ப மருத்துவக்கல்லூரியின் இரண்டாவது வாயிலுக்கு சக்கர நாற்காலியில் இந்த தம்பதியர் வந்தனர்.

அங்கு அவர்களை வழியனுப்ப வந்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கண்களில் திரண்ட கண்ணீரால் நன்றி தெரிவித்தனர். இவர்களிடமிருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளான செவிலியர் ரேஷ்மா மோகன்தாசும் சிகிச்சை முடிந்து வெள்ளியன்று வீடு திரும்பினார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இருவருக்கும் காய்ச்சல், இருமல், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருந்தது. சிகிச்சையின் போது, தாமஸுக்கு மாரடைப்பும் நிமோனியாவும் ஏற்பட்டது. வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் இருந்தார் என மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் டி.கே.ஜெயக்குமார் கூறினார்.