உலகம் முழுமையும் உள்ள மலையாளிகள் ஓணத் திருநாளை கொண்டாடுகின்றனர். வருடம் தோறும் கோலாகலமாகவும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்டிகை ஓணத் திருநாள். அத்தப்பூ கோலம் போட்டு, புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவை பலவித இனிப்புகளோடு நட்புகளுடனும், உறவுகளோடும் உண்டு மகிழ்வோடு கொண்டாடும் திருநாள். அன்றைய தினம் அனைத்து வீடுகளும், நாடும், நகரமும் விழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கும். ஜாதி, மத வேறுபாடுகளின்றி அனைவரும் மலையாளிகள் என்ற உணர்வோடு, மகிழ்வோடு கொண்டாடும் பண்பாட்டுத் திருவிழா. ஆனால், இந்த ஆண்டு அனைத்து கலகலப்பும் காணாமல் போய் விட்டது. கோவிட்-19 எனும் பெருந்தொற்று உலகத்தையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்கள் பாதிப்பு. பல லட்சம் மரணம். பொருளாதாரம் நிலைகுலைந்து வல்லரசு நாடுகளே திணறிக் கொண்டிருக்கும் நிலை.
இந்தியாவில் முதல் 3 கோவிட் 19 தொற்றாளர்கள் கேரளாவிலேயே கண்டறியப்பட்டனர். உடனடியாக தோழர் பினராய் விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு முன்தயாரிப்போடும், சரியான திட்டத்தோடும் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், சிகிச்சைக்கான சரியான முன்னெடுப்புகளையும் செய்ததால் நோய் பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து உரிய பொருளாதார உதவி செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறது. முன்யோசனையும், முன் தயாரிப்பும் இன்றி திடீரென மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பால் அனைத்துப் பகுதி மக்களும் வருவாயும், வாழ்வாதாரமும் இழந்தனர். புலம் பெயர் தொழிலாளர் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. இருந்தும் கேரள அரசு மக்களின் கஷ்டங்களைக் குறைக்கும் வகையில் எடுத்த நிவாரண நடவடிக்கைகள் பாராட்டத் தகுந்தவை. மேலும் நோய் பரவலைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளன. மாறாக, மத்திய மோடி அரசோ கோவிட் தொற்றை காரணம் காட்டி பொது முடக்கத்தை அறிவித்து மக்களை முடக்கி போட்டுவிட்டு, தனது சங் பரிவார் அஜண்டாக்களை நிறைவேற்றி வருகிறது.
விமான நிலையங்களைத் தனியாருக்கு தாரை வார்க்கிறது. மேலும், கார்ப்பரேட்டுகளுக்கு கொட்டிக் கொடுப்பதோடு, சுற்று சூழல் விதிகளில் மாற்றம் செய்வது, நிலக்கரி சுரங்கங்களையும், ஏர் இந்தியாவையும் தனியாருக்கு தாரை வார்ப்பது, புதிய கல்விக் கொள்கை எனும் பெயரால் கல்வியை சாமானியருக்கு எட்டா கனியாக்குவது உள்ளிட்ட மக்கள் விரோத கொள்கைகளை அமலாக்கி வருகிறது. கேரளா கோவிட் 19 தொற்று மட்டமன்றி, பெருவெள்ளம், கோழிக்கோடு விமான விபத்து மரணம், நிலச்சரிவால் ஏற்பட்ட மரணங்கள் உட்பட பல சிரமங்களை தொடர்நது சந்தித்து வருகிறது. பட்ட காலிலே படும் என்பது போல் கேரளத்தில் தொடர்ந்து பாதிப்புகள் வந்தாலும் பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு மக்களுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் உள்ளது. இத்தகு பாதக நிலையிலும் கேரள மக்கள் இடது ஜனநாயக முன்னணி அரசின் நடவடிக்கைகள் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் நிலையில் உள்ளன. ஓணத் திருநாளைக் கொண்டாடும் சூரியனைக் கண்ட பனி போல் இயற்கை தந்த அனைத்து கஷ்டங்களும் விரைவில் நீங்கி மகிழ்ந்திடும் வகையில் திருப்பத்தைத் தந்திடும் என்ற நம்பிக்கையுடனும் அனைத்து மலையாளிகளுக்கும் ஓணத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.