கொல்லம், ஏப். 1- கோவிட் 19 வைரசை எதிர்கொள்ளும் விதமாக உலகமே ஓடி ஒளியும் நிலையிலும் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிகெடுக்கும் செயலில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். கோவிட் பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் சமூக ஊரடங்கை பிரதமர் பிறப்பித்தார். அதன்படி அனைத்து விதமான மதுபானக்கடைகளையும் மூட கேரள அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் கொல்லம் மாவட்டம் கொட்டியம் பகுதியில் தாராளமாக கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதையொட்டி கண்ணநல்லூர் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பூலியிலா கோயில் அருகே கள்ளச் சாராயம் தயாரித்த ஆரோமல் (35), ஸஜி (40) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஆர்எஸ்எஸ், பாஜக பிரமுகர்களாவர். அவர்களிடமிருந்து சாராயமும் ரூ.5000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களது கூட்டாளிகள் இருவர் தப்பி ஓடினர். காவல்துறை வாகனம் உடனடியாக செல்ல முடியாத பகுதியில் இவர்கள் சாராயம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இருவரும் கொட்டாரக்கரா சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.