tamilnadu

img

தலைநகரில் தொற்றிடம் தெரியாத 51 நோயாளிகள்.... இருவர் சுகாதார ஊழியர்கள்... கண்காணிப்பில் 20,315 பேர்

திருவனந்தபுரம்:
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தொற்றிடம் தெரியாத நோயாளிகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொற்றிடம் தெரியாத நோயாளிகளின் எண்ணிக்கை 51 ஆகவும், கண்காணிப்பில் உள்ளோர் எண்ணிக்கை 20,315 ஆகவும் அதிகரித்துள்ளது.ஞாயிறன்று நோய் கண்டறியப்பட்ட 27 பேரில் 8 வயது சிறுமி உட்பட 11 பேரது நோய் தொற்றிடம் தெரியவில்லை.

இருவர் சுகாதார ஊழியர்கள். இதோடு தொற்றிடம் தெரியாதநோயாளிகள் 51 ஆனது. 10 பேருக்கு தொடர்பு மூலம் நோய்தொற்றியுள்ளது. 5 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.மாவட்டத்தில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 126 ஆனது. சிகிச்சை பெற்ற வந்த 11 பேர் குணமடைந்தனர்.தொற்றிடம் தெரியாத 11 பேரில் இருவர் குமரிச்சந்தை மீன் மார்க்கட்டில் வேலை செய்தவர்கள் என்பதால் அங்கிருந்து நோய் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆற்றுக்கால் தனியார் மருத்துவமனையின் மருந்தாளுநரான மணக்காடைச் சேர்ந்தவரும் (வயது 22), செவிலியரான செம்பழந்தியைச் சேர்ந்தவரும் (வயது 29) நோய் தொற்றுக்கு உள்ளான சுகாதார ஊழியர்களாவர்.கட்டுப்பாட்டுப் பகுதியாக (ஹாட்ஸ்பாட்) அறிவிக்கப்பட்ட பூந்துறை காவல்நிலையத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. முன்பக்க வாயிலில் புகார் பெட்டி வைக்கப்பட்டு காவல் அதிகாரிகள் அவ்வப்போது புகார்களை பரிசீலித்து வருகின்றனர்.

;