கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை அவரது மாமனாரே கழுத்து அறுத்து ஆணவப்படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் (28) என்ற இளைஞர், ஒரு பெண்ணை காதலித்து பெண்வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த இளைஞர் கே.ஆர்.பி. அணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் அந்த ஜெகனை வழிமறித்து அவரின் கழுத்தை அறுத்து கொடூரமாக ஆணவப்படுகொலை செய்துள்ளனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே நடுரோட்டில் படுகொலை செய்துள்ள குற்றவாளிகளை கைதுசெய்யக்கோரி உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ஜெகனின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.