tamilnadu

img

தக்காளி, வெங்காய வர்த்தகம் செய்யும் போது கிரிக்கெட்டுக்கு மட்டும் ஏன் தடை?

சோயப் அக்தர் விளாசல்

பாகிஸ்தான் மண்ணில் நிகழும் தீவிரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியாவில் நிகழும் தாக்குதல் பிரச்சனைகளால் கடந்த 7 ஆண்டுகளாக இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இருதரப்பு தொடரில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகின்றன.  கடைசியாக 2012-13-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இந்தியா வந்தது. அதன் பிறகு உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது.  இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தொடர் வழக்கம் போல நடைபெறுவதற்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிர முயற்சி மேற்கொண்டது. சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் முறையீடு செய்தது. நஷ்ட ஈடு கோரியது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு பிரச்சனையை மட்டும் காரணமாகக் கொண்டு பாகிஸ்தான் முயற்சிக்கு செக் வைத்து வருகிறது. இதனால் கடுப்பான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் மண்ணில் பாதுகாப்பு சூழல் நன்றாக உள்ளது என்பதை நிரூபிக்க இலங்கை, வங்கதேச நாடுகளைப் பாகிஸ்தான் மண்ணில் விளையாட வைத்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதனை கண்டுகொள்வதாக இல்லை.   

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் உறவுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதற்காக ஆக்ரோஷமாகக் கருத்து கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது (சுருக்கம்),”இரு அணிகளும் டேவிஸ் கோப்பை விளையாடலாம், கபடி விளையாடலாம், வெங்காயம் மற்றும் தக்காளி வர்த்தகம் விற்கிறோம், சாப்பிடுகிறோம். பிறகு ஏன் கிரிக்கெட் விளையாட முடியாது? இதில் என்ன தவறு இருக்கிறது. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இந்தியா பாகிஸ்தானுக்கு வர முடியாது, பாகிஸ்தானுக்கு இந்தியா செல்ல முடியாது என்று எனக்குப் புரிகிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட் விளையாட முடியாவிட்டால் அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும். நீங்கள் உறவுகளை துண்டிக்க விரும்பினால், வர்த்தகத்தை நிறுத்துங்கள், கபடி விளையாடுவதை நிறுத்துங்கள். ஏன் கிரிக்கெட்டை அரசியல் ஆக்குகிறீர்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுவது மிகவும் முக்கியமானது.ஏனெனில் அது வருவாயைக் கொடுக்கிறது. அது ஊக்கமளிக்கிறது. புதிய வீரர்களை நாம் பார்க்கிறோம். அனைவரும் முன்வந்து இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்களைச் சாத்தியமாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.  சோயப் அக்தரின் இந்த அதிரடி பேச்சு கிரிக்கெட் உலகில் மட்டுமின்றி இருநாட்டு அரசியல் உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.