இங்கிலாந்து வீரர் ஆர்ச்சரை நோக்கி நிறவெறி கோஷம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த நிலையில், அந்த போட்டியில் விரும்பத்தகாத நிகழ்வு நிகழ்ந்து விவாத பொருளாக கிரிக்கெட் உலகில் சுழன்று வருகிறது. இங்கிலாந்து அணிக்காகக் கடைசிக் கட்டத்தில் போராடிய அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் நிறத்தை வைத்து நியூஸிலாந்து ரசிகர் நிறவெறி தொடர்பான கோஷங்களை எழுப்பினார். இந்த சம்பவத்தால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சியடைந்த நிலையில், சம்பவம் நடந்த தருணத்திலேயே நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்டது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனும் புதனன்று மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக வில்லியம்சன் கூறிய தாவது, “பலவிதமான கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்கள் நியூஸிலாந்தில் ஆர்ச்சர் மீதான நிறவெறி சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. எங்கள் மண்ணில் நடந்த நிறவெறி பிரச்சனைக்காக நான் ஆர்ச்சரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இப்படிப்பட்ட சம்பவம் நிகழாது என நம்புகிறேன்” இவ்வாறு கூறியுள்ளார். இந்த இனவெறி பிரச்சனைக்குக் காரணமான ரசிகரை மவுண்ட் நகர காவல்துறையினர் தேடி வரு கின்றனர். மேலும் பே ஓவல் மைதானத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் மற்ற ரசிகர்களிடம் தீவிர விசாரணையில் களமிறங்கியுள்ளனர் என நியூஸி லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஒயிட் கூறியுள்ளார். வரும் 29-ஆம் தேதி 2-வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடை பெறுகிறது. இந்த போட்டிக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.