இந்திய கிரிக்கெட் அணி மூன்று விதமான தொடரில் பங்கேற்பதற்காக மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி தொடங்கும் சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டி களைக் கொண்ட டி-20 தொடரின் முதல் இரண்டு ஆட்டம் அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் நடை பெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க தனி விசா தேவை என்பதால் இந்திய வீரர்கள் அமெரிக்க அரசிடம் விசா கோரி விண்ணப்பித்தனர். இந்திய வீரர்கள் அனைவருக்கும் அமெரிக்க அரசு விசா தர சம்மதித்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் விண்ணப்பம் மட்டும் நிராகரித்தது. ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் தன்னை கொடுமைப்படுத்தியதாகக் கூறி கொல்கத்தா காவல்துறையில் தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது. ஷமியின் விசா பிரச்சனையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிசிசிஐ அமெரிக்க தூதரகத்திற்குத் தேவையான அனைத்து ஆவணங்களுடன் கடிதம் அனுப்பி உள்ளது. அமெரிக்கா அரசு எடுக்கும் நடவடிக்கை பொறுத்தே ஷமி விண்டீஸ் தொடரில் பங்கேற்கும் கனவு நனவாகும்.
விசா ஏற்பு?
பிசிசிஐ-இன் கோரிக்கை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டதாகவும், விண்டீஸ் அணிக்கெதிரான டி-20 தொடரில் ஷமி பங்கேற்கப் பிரச்சனையில்லை என ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும் பிசிசிஐ அந்த செய்தியை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.