ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில், முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது. பூரன் 89 ரன்களும் (64 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் பொல்லார்டு ஆட்டமிழக்காமல் 74 ரன்களும் (51 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சேர்த்தனர். இந்திய அணியின் நவ்தீப் சைனி, 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதை அடுத்து, 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 48.4வது ஊவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி 85 ரன்களும் (81 பந்து, 9 பவுண்டரி), கே.எல்.ராகுல் 77 ரன்களும் (89 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ரோஹித் சர்மா 63 ரன்களும் (63 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) இந்திய அணிக்கு சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீமோ பால் 3 விக்கெட்காளை வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணிக்கு தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது. விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருதும், ரோஹித் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.