tamilnadu

img

சீனாவைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்

சண்டே எக்ஸ்பிரஸ்

தற்போதைய நவீன உலகில் எந்த வகை விளையாட்டாக இருந்தாலும் அதில் சாதிக்கப் பயிற்சி திட்டம், உணவு முறை, உடல் தகுதி ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றால் தான் சாதாரண உள்ளூர் தொடரில் காலடி வைத்து ஒலிம்பிக் வரை கூட பயணிக்கலாம்.    ஆனால் இந்த வகையான பயிற்சி திட்டத்தில் தேர்ச்சி பெறுவது சாதாரண விஷயம் இல்லை. பலமான உடல்வாகு இருந்தாலும் புத்திக்கூர்மை, துடிப்பான மனதிடம் ஆகியவை இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். தற்போதைய உலகில் பெரும்பாலான நாடு கள் தங்கள் வீரர் - வீராங்கனைகளை விளையாட்டுத் துறையில் களமிறக்க ஒரே மாதிரியான பயிற்சி திட்டத்தைக் கொண்டுள்ளன. ஆனால் மக்களின் குடியரசு என அழைக்கப்படும் சீனாவின் விளை யாட்டு பயிற்சி திட்டம் சற்று வேறுபட்டதாகும். தனது மாறுபாடான பயிற்சி திட்டத்தால் தான் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் பதக்கங்களைக் குவித்து வரலாறு படைக்கிறது. 

சீனாவின் பயிற்சி திட்டம்      

உலகில் முதன்மையான விளையாட்டான ஒலிம்பிக் (கோடை) விளையாட்டில் பதக்கம் பெறுவது தான் சீனாவின் முக்கிய குறிக்கோளாகும். இந்த தொடருக்குத் திறமையின் அடிப்படையில் சாதிக்கும் வீரர் - வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்குச் சிறப்புத் திட்டம் மூலம் பயிற்சி அளிப்பார்கள். இந்த சிறப்புத் திட்டத்தில் இருக்கும் வீரர்கள் பெரும்பாலும் உலக சாம்பி யன்ஷிப் தொடர்களில் களமிறங்கமாட்டார்கள். ஒன்றிரண்டு வீரர்கள் மட்டுமே களமிறங்குவார்கள். அவ்வாறு களமிறங்கும் வீரர்கள் பதக்கம் கிடைக்கிறதோ இல்லையோ அதனைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் அடுத்த சில நாட்களில் ஒலிம்பிக் தொடருக்குத் தயாராகுவார்கள். 

புரியும் படி கூறினால் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் குழுவில் இரண்டு மாணவர்கள் வேறு வகையாக உள்ளார்கள். ஒரு மாணவன் முதல் பருவம், காலாண்டு, அரையாண்டு என அனைத்து சாதாரண தேர்வுகளில் முதல் தரத்தில் மதிப்பெண் பெறுகிறான். மற்றொரு மாணவன் பருவத்தேர்வுகளில் சரியாக மதிப்பெண் பெறா மல் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பெறுகிறான். பருவத்தேர்வுகளில் முதலிடம் பெற்றுள்ள மாணவனோ 2-ஆம் இடத்தை பிடிக்கிறான். இதற்குக் காரணம் பருவத்தேர்வுகளில் மதிப்பெண் பெறாத மாணவன் பருவத்தேர்வை பற்றிக் கண்டு கொள்ளாமல் ஆண்டுத்தேர்வுக்கு தொடக்கம் முதலே தயாராகி வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதனைப் பெற்றுள்ளான். இதனையே சீனா பின்பற்றுகிறது.    

ஆனால் மற்ற நாடுகள் அப்படி இல்லை. எந்த தொடராக இருந்தா லும் அதில் களமிறங்கி பதக்கம் வெல்ல வேண்டும் என்று பேராசை யுடன் வீரர்களை ஆண்டு முழுவதும் சோர்வடைய வைத்து ஒலிம்பிக்கில் திணற வைப்பது வழக்கம். இந்த வகையான முறையைப் பின்பற்றும் நாடுகளில் முதன்மையாக இருப்பது இந்தியா தான். அடுத்த இடங்களில் இங்கிலாந்து, பிரேசில், கனடா, ஆஸ்திரேலிய நாடுகள் உள்ளன. 

சீனாவின் வெற்றி ரகசியம் 

சீன விளையாட்டு வீரர்கள் குழு விளையாட்டை விரும்ப மாட்டார்கள். நீர் விளையாட்டில் (டைவிங்) நன்றாகச் செயல்படுவார்கள். தங்கள் நாட்டு வீரர்கள் முக்கியமான விளையாட்டுத் தொடர்களில் பதக்கம் வெல்லாவிட்டால் அடுத்த முறை பார்க்கலாம் என ஊக்கம் அளிப்பார்கள். விளையாட்டு பயிற்சியுடன் யோகா, மனதிறன் பயிற்சிகள் அதிகம் அளிப்பார்கள். எந்தவகையான விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்கினாலும் குங்பூ எனப்படும் தற்காப்புக் கலைக்கு இணையான பயிற்சி அளிப்பார்கள்.இது புத்திக்கூர்மை, காலம் அறிந்து செயல்படுதல், அதிரடி ஆட்டம் என அனைத்துக்கும் உதவுகிறது. மேலும் நாம் விஷத்தன்மை உள்ள உயிரினமாகக் கருதும் தேள், பாம்பு, பூச்சி வகைகளை அவர்கள் உணவாக உண்கின்றனர். இது அவர்களுக்குக் கூடுதல் பலம் அளிக்கிறது.        

இந்தியாவின் பேராசை 

இந்திய விளையாட்டுத் துறையை எடுத்துக்கொண்டால் ஒலிம்பிக் திட்டம் என்று பெயரளவில் அறிவித்துவிட்டு அந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ள வீரர் - வீராங்கனைகளைக் கிழக்கு ஆசிய விளை யாட்டுப் போட்டி முதல் உலக சாம்பியன்ஷிப் தொடர் வரை எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்துவிட்டு ஒலிம்பிக் தொடரில் களமிறக்கு வார்கள். இதனால் திறமையான வீரர்கள் இருந்தும் இந்தியா ஒலிம்பிக்கில் ஒன்றிரண்டு பதக்கம் தான் வெல்லும். பதக்கத்திற்காக ஆண்டு முழுவதும் போராடுவதால் அழுத்தம் ஏற்படும். இதனால் தான் இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் சொதப்புகிறார்கள். ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவது பெரிய விஷயமல்ல... அதனை எப்படிப் பெறுவது என்பதே முக்கியம்... சீனாவைப் பின்பற்றினால் இந்தியராகிய நாமும் ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களைச் சாதனை படைக்கலாம்...

- சதீஸ் முருகேசன்